கந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: கந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம் தொடர்பாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கருணாநிதி குறித்து அவதூறு.. யூடியூப் மாரிதாஸ் மீது வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி மனு!
இந்தநிலையில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, தங்களை காவல்துறை தவறாக கைது செய்து விட்டனர், எனவே ஜாமீன் வழங்க கோரி சோமசுந்தரம், குகன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ரோசிலின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தீபிகா, மனுதாரர்கள் இருவரும் அந்த சேனலின் உரிமையாளர் கிடையாது, அந்த வீடியோவின் கருத்தும் அவர்களது கிடையாது. சம்பளத்துக்கு தான் வேலை செய்து வந்துள்ளனர். மேலும், இவர்களது வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்துள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். வாதத்தை கேட்ட நீதிபதி ரூ.5 ஆயிரம் பிணை தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளையும் பிறப்பித்தார்.