எஸ்ஐ ரகுகணேஷ் கைது சரி!.. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்?.. கனிமொழி
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன் என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸ் கொலை வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும், எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறேன்.
சாத்தான்குளம் தந்தை- மகன் சித்ரவதை கொலை.. எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஆனால், சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? இதோடு நின்றுவிடாமல், இருவரது கொலைக்கும் உடந்தையாக இருந்த காவல் துறையினர், மருத்துவர், மாஜிஸ்திரேட் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி கிடைக்கும் வரை நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும்,எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறேன்.ஆனால், சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? #Sathankulamcustodialdeath
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 1, 2020
இந்த நிலையில் இன்றைய தினம் மற்றொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது போல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.