கீதா ஜீவன் பேசிய தேவையில்லாத பேச்சு.. கனிமொழிக்கு எதிராக திரும்புமா.. கவலையில் திமுக!
கீதா ஜீவன் ஆடியோ விவகாரமானது கனிமொழிக்கு எதிராக திரும்புவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை, 15 நாளைக்கு முன்பு இருந்த நிலைமை வேறு, இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை வேறு!
3 வருடங்களுக்கு முன்பே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது என கனிமொழி திட்டமிட்டார். அதன்படியே காய்களையும் நகர்த்தினார். ஒரு கிராமத்தையும் தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார். நாடார் இன மக்களை சந்தித்து பேசி வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களோடு கரம் கோர்த்தார்.
கிராம சபை கூட்டத்தின்போதும், மக்களின் மன வெகுவாக கவர்ந்தார். கிட்டத்தட்ட தூத்துக்குடி தொகுதியே திமுக வசம் வந்துவிட்டது போன்ற ஒரு பிம்பம் ஏற்படவும் ஆரம்பித்தது. ஆனால் எல்லாமே ஒரே ஒரு ஆடியோவால் நொறுங்கி போனது. எம்எல்ஏ கீதாஜீவன் பேசிய ஆடியோதான் அதற்கு காரணம்!
வாரிசு அரசியல்.. இதிலும் திமுக - அதிமுகதான் போட்டா போட்டி.. ஒருவருக்கொருவர் இளைப்பில்லை!
ஐடியா தருகிறார்
மதுரையை சேர்ந்த சைவ வேளாளர் சங்க நிர்வாகி ஒருவர் கீதாஜீவனிடம் பேசும்போது, அவருக்கு ஆதரவாகவும் பட்டியல் இனத்தினருக்கு எதிராகவும் கீதாஜீவன் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது வேளாளர் என்ற பட்டம் பிற சாதியினருக்குக் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டுமானால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், கிராமங்களில் உள்ள ஏராளமான அமைப்புகளின் பெயரில் மனுக்களை எழுதி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு அனுப்புமாறு கீதாஜீவன் ஐடியா கொடுக்கிறார். மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருக்கும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் மனு கொடுக்குமாறும் கீதா ஜீவன் அறிவுரை வழங்குகிறார்.
தலித் அமைப்புகள்
இப்படி ஒருதலைபட்சமாக கீதா ஜீவன் பேசிய பேச்சுக்குதான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி அது இன்றைய தேதிவரை குறையாமல் உள்ளதாம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் கீதாஜீவனை நுழைய விடமாட்டோம் என சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் அறிவித்திருந்தார்கள்.
அதிருப்தி
அன்று கீதா ஜீவன் பேசியது அத்தனையும் இன்றைக்கு கனிமொழிக்கு எதிராக திரும்பி இருக்கிறதாம். ஏற்கனவே வரும் தேர்தலில் தலித் தொகுதிகளில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி திமுகவின் தேவேந்திர குல வேளாளர் தொண்டர்களிடம் இது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
பலவீனம்
கனிமொழிக்கு எதிரான நிலைப்பாடு என்றால், அது கண்டிப்பாக தமிழிசை சவுந்தராஜனுக்கோ அல்லது டிடிவி தினகரனுக்கோ தான் சாதகமாக அமையும் சூழல் உள்ளது. இதில் டிடிவி தினகரன் பிரிக்கக்கூடிய ஓட்டுக்கள் யாருக்கு பலமாகவும், பலவீனமாகவும் இருக்க போகிறது என்பதை வைத்தும் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும்.
வியூகம்
சுருக்கமாக சொல்லபோனால், தேர்தல் பிரச்சாரமும், அதற்கான வியூகமும் முக்கியமான பங்கை வகித்தாலும், மீனவர் சமூகமும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயமும் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என்பதுதான் இன்றைய தூத்துக்குடி தொகுதி கள நிலவரம்!