மாற்று திறனாளிகளை மனிதர்களாக மதித்தாலே போதும்.. கனிமொழி பேச்சு
மாற்று திறனாளிகளை மனிதர்களாக மதித்தால் போதும்.. கனிமொழி
சென்னை: "மாற்று திறனாளிகளை கடவுளின் குழந்தையாக மதிக்க தேவையில்லை.. அவர்களை முதலில் மனிதர்களாக மதித்தாலே போதும்" என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னையில் 'மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு' நடைபெற்றது. டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "மாற்றுத் திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை திமுக நிறைவேற்றி தந்துள்ளது. அவர்களுக்கு கருணையையும் தாண்டி, உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.
கோயிலுக்குள் விடுவதில்லை
எவ்வளவுதான் போராட்டங்கள் நடத்தினாலும் அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் கோயில்களுக்குள் விடுவதில்லை. ஏனென்றால், காலில் ‘காலிபர்' சாதனம் போட்டிருக்கிறார்கள் என்பதால்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி வழங்குவதில்லை.
மனிதர்களாக மதிக்க வேண்டும்
கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள் என்றால், கடவுளை காணக்கூட இவர்களுக்கு உரிமை இல்லையா? இதற்கு கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்கவே தேவையில்லை, அவர்களை மனிதர்களாக மதித்தால் போதும். மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்" என்றார்.
திமுக திட்டங்கள்
இதேபோல, மாற்று திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டுவந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார். இதுகுறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மனசாட்சி சொல்லும்
அதற்கு பதிலளித்த கனிமொழி, "அமைச்சருக்கு நான் பதில் சொல்வதை விட தெருவில் போராடி கொண்டிருக்கும் மாற்று திறனாளிகளின் போராட்டமே பதில் சொல்லும், இதுவரைக்கும் மாற்றுத் திறனாளிகளை கூப்பிட்டு இவர் பேசியிருப்பாரா? ஏதாவது ஒரு பிரச்சனையை இதுவரைக்கும் தீர்த்து இருப்பாரா? என்பதை அவர்களின் மனசாட்சியே இதற்கு பதில் சொல்லும்"என்றார்.