முக ஸ்டாலின்.. ப சிதம்பரம் குறித்த முதல்வரின் பேச்சால்.. கடும் கோபம் அடைந்த கனிமொழி எம்பி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் என்றும் அவர் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் திமுக எம்பி கனிமொழி கட்டாமாக விளக்கம் அளித்துள்ளார்.
உதகையில் புயல் பாதித்த பகுதிக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின் விளம்பரப்படுத்துவதற்காகத்தான் நீலகிரி சென்றாரா. பாதிப்பு ஏற்பட்ட மறுநாளே வருவாய்த்துறை அமைச்சர் நீலகிரிக்குச் சென்று, துரிதமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். பத்திரிகைகளில் பேட்டியளிப்பார். அதோடு முடிந்துவிடும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி இதற்கு பதில் அளிக்கும் வகையில் கூறுகையில், முக ஸ்டாலின் தமிழகம் மக்கள் எல்லோரும் அறிந்த தலைவர் அவர். எனவே இனிமேல் அவருக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
அரசாங்கம் முன்வர வேண்டும்
முதல்வர் ஏன் இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை. அவரை யார் தடுத்தது அதை அவர் செய்திருக்கலாமே. இதற்கான பதிலை முதல்வர் அளிக்க வேண்டும் .மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.
திமுக போராடிக் கொண்டு இருக்கு
ஏற்கனவே கஜா புயலால் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு நிதி முழுமையாக கிடைக்காத நிலையில் திமுக மத்திய அரசிடம் நிதி ஒதுக்க வலியுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, மத்திய அரசு தர வேண்டிய நிதியை பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் இருக்கிறது. பா.ஜ.க வின் ஒரு கையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது அதிமுக. தமிழகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற இந்த சூழலிலாவது மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய போதிய நிதியை கேட்டு பெற வேண்டும் என்றார்.
கனிமொழி பதில்
தமிழகமும் நாளை பிரிக்கப்பட்டால் அதிமுக மௌனமாக தான் இருக்கும் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பதிலளித்த முதல்வர் அவரால் ஒரு பயனும் இல்லை பூமிக்கு பாரம் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, முதல்வரின் கீழ்த்தரமான முறையில் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.
காஷ்மீர் குறித்து கனிமொழி
மேலும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு 144 தடை போடப்பட்டு இருக்கிறது. எனவே இதை ஆதரித்து பேசுபவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் அந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் எனறார் கனிமொழி.