சிங்கிளாக கையாண்டு.. சூப்பராக டீல் முடித்து.. சுமூகமாக டெல்லி கூட்டணியை முடிவு செய்த கனிமொழி!
காங்கிரஸ் தலைவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்தவர் கனிமொழிதான்.
Recommended Video
சென்னை: டெல்லி பக்கமே ஸ்டாலினை போக விடாமல், டெல்லி தலைவர்களை சென்னை பக்கமே வரவிடாமல் சூப்பராக டீல் பேசி முடித்து கூட்டணிக்கு வித்திட்டுள்ளார் எம்பி கனிமொழி!!
கருணாநிதி இறந்ததிலிருந்தே கனிமொழி ஓரங்கட்டப்பட்டு விட்டார், முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் இருவருமே கட்சியில் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் பகிரங்கமாக திமுக மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த ஆதங்கம் திமுக தரப்பிலேயே எழுந்ததுதான் ஆச்சரியம்!
ஆனால் எத்தனை விதமான விமர்சனங்கள் வந்தாலும், அனுதாப அலை வீசப்பட்டாலும் கனிமொழி அமைதியான போக்கையே கடைப்பிடித்தார். கேட்டபோதெல்லாம் நாசூக்காக பதிலளிக்காமல் விலகினார், வார்த்தைகளை அள்ளி தெளிக்கவில்லை. மாறாக ஸ்டாலின் மீதான நல்லெண்ணத்தையும், கழகத்தின் பிடிப்பையும்தான் தன் பேட்டிகளில் வெளிப்படுத்தி வந்தார்.
முற்றுப்புள்ளி
அதனால்தானோ என்னவோ, கனிமொழி தூத்துக்குடியை கேட்டதும் அதற்கு ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து அங்கு கிராம சபை நடத்தவும் மகிழ்வுடன் பணிக்கப்பட்டார். அப்போதுதான் கனிமொழி ஓரங்கட்டப்படவில்லை... கட்சி பணியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பது தெளிவானது. வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தி
ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி ஒருபடி மேலே போய் இன்று உயர்ந்திருக்கிறார் கனிமொழி. தொகுதி பங்கீடு பிரச்சனை திமுகவுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட துவங்கியது. நாங்கதான் டெல்லியில் ஆட்சியை பிடிக்க போகிறோம் என்று ராகுலை காரணம் காட்டியே 12 முதல் 15 வரை வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கேட்டது.
முகுல் வாஸ்னிக்
ஆனால் மாநிலத்தில் காங்கிரசின் பலத்தை வைத்தும், இதற்கு முன்பு ஏற்பட்ட தோல்விகளை வைத்தும் ஒற்றை இலக்கை தரவே திமுக முடிவு செய்தது. இந்த பிரச்சனை டெல்லி வரை சென்றது. இந்த விஷயத்தில் சபரீசன் தலையிட்டும் காங்கிரசை சமாளிக்க முடியவில்லை. கடைசியில் கனிமொழி டீல் பேச இறங்கினார். முதலில் முகுல் வாஸ்னிக் இறுதியாக ராகுல் காந்தி என ஒவ்வொரு சந்திப்பிலும் ஈடுபட்டார்.
டீல் பேசி முடித்தார்
அவர்களிடம் தமிழக காங்கிரஸ் கடந்த கால தோல்விகளை விளக்கினார். இறுதியாக ஒற்றை இலக்கும் இல்லாமல், காங்கிரஸ் கேட்ட 12, 15 என்றும் இல்லாமல் 10 என்று நடுநிலையில் வந்து நின்றார். அத்துடன், கண்டிப்பாக 10 தொகுதிகளிலும் ஜெயிக்காவிட்டால் அது அதிமுகவுக்கு சாதகமாக போய்விடும் என்றும் விவரித்துள்ளார். அதன்படியே ராகுலும் ஓகே சொல்ல போய் கூட்டணி பங்கீடு முடிவாகி இருக்கிறது.
கருணாநிதி மகள்
டெல்லி தலைகள் எல்லாம் அதிமுகவினரை பார்க்க ஓடிவந்தார்கள். அதேபோல, தமிழக "மணி"யான அமைச்சர்களும் டெல்லிக்கு நடையாய் நடந்தார்கள். ஆனால் கனிமொழி மட்டுமே இந்த விஷயத்தில் இறங்கி இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த டீலை முடித்துள்ளார். அதான் எம்பி கனிமொழி... கருணாநிதி மகள் என்றால் சும்மாவா என்ன!!