கனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி
சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான தற்காப்பு கருவிகள் வாங்குதல், உள்ளிட்ட பணிகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறியுள்ளார். மேலும், தனது நிதியை கொண்டு கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கவும் உபகரணங்கள் வாங்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே மு.க.அழகிரி எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் தனது சொந்த நிதியாக ரூ.10 லட்சத்தை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ளார். முதலமைச்சர் பொதுநிவாரண நிதி பிரிவுக்கு பத்து லட்சம் வழங்கிய அழகிரி அதற்கான காசோலையை தனது உதவியாளர் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் அளித்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு தனது நிதியை பயன்படுத்த வேண்டும் என அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்தும் தொழிலதிபர்கள் முதலமைச்சர் பொதுநிவாரண நிதி பிரிவுக்கு பல கோடி ரூபாய் நிதி உதவி செய்திருக்கின்றனர். திமுக எம்.எல்.ஏ.க்களில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜி ஒரு கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மட்டும் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழியை போல் பல திமுக எம்.பி.க்களும் தங்கள் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு கோடி வரை நிதி அளித்துள்ளனர்.