தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள்... நெஞ்சை விட்டு அகலவில்லை -கனிமொழி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் சுவடுகள் இன்னும் தன் நெஞ்சை விட்டு அகலவில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்த இந்த கோர நிகழ்வின் இரண்டாம் ஆண்டும் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான போராளிகளுக்கு வீரவணக்கம் என்று தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது; தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து, போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம்.
செங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு
துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.