நீங்கள் இந்தியரா? கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட பாதுகாப்பு அதிகாரி- விமான நிலையத்தில் ஷாக்
சென்னை: நீங்கள் இந்தியரா? என கனிமொழி எம்.பி.யிடம் பாதுகாப்பு அதிகாரி கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த (சிஐஎஸ்எஃப்) பெண் போலீஸ் என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
அதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி!?
ஆங்கிலம்
அதற்கு நான் எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர் நீங்கள் இந்தியரா என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என எப்போது முடிவு செய்யப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன் என ட்விட்டரில் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் கட்சிகள்
மேலும் இந்தித் திணிப்பு என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். அதில் பிரதான கட்சி திமுகவாகும். அதிலும் கருணாநிதி தனது 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். அந்த வகையில் நாடாளுமன்றத்தில் 38 இடங்களை வென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்தியர்
இதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் திமுகவினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கனிமொழியை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியுள்ளது, இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்று கருத வைக்கிறது.
கேள்வி
கனிமொழியும் #HindiImposition என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் தனது கேள்வியை வைரலாக்கி வருகிறார். மத்திய அரசை எதிர்த்து ஏதாவது கேள்வி எழுப்பினால் சிலர் ஆன்டி இந்தியன் என விமர்சித்ததுண்டு. ஆனால் ஒரு பாதுகாப்பு படை அதிகாரியே நீங்கள் இந்தியரா என கேட்டது கனிமொழிக்கு மட்டும் அல்ல அந்த ட்வீட்டை படிப்போருக்கும் ஷாக்கிங்காகவே இருக்கிறது.