பாஜகவுக்கு வளைந்து கொடுத்து எடப்பாடி ஆட்சி நடத்துகிறார்... கனிமொழி விமர்சனம்
சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறப்பொவது உறுதி என்றும், அதிமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளதாகவும் கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.
விக்ரவாண்டி தொகுதியில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் விராட்டிக்குப்பத்தில் பேசும் போது இதனைக் கூறினார். மத்திய பாஜக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொண்டு வளைந்து கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாகவும், நீட் தேர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் இதுவரை தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என சாடினார்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை என எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை என்று கனிமொழி குற்றஞ்சாட்டினார். மக்கள் தங்கள் தெரு பிரச்சனைகளை கூட யாரிடம் சொல்வது எனத்தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசு திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருவதாக கூறிய கனிமொழி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத அதிமுக அரசு மீது மக்களுக்கு கடும் கோபம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் தரப்பட்டதாகவும், இப்போது விவசாயிகளுக்கு அரசு எந்த சலுகைகளும் அளிப்பதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை கூட பெற்றுத்தர முடியாத அரசு தான் தமிழகத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.