"லைப்ரரி இருக்கு, புக்ஸ் இல்லைக்கா".. ஏக்கத்துடன் கூறிய அகிலா.. டக்கென்று நிறைவேற்றிய கனிமொழி!
தூத்துக்குடி கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்பி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார்.
சென்னை: "அக்கா... எங்க ஊருல லைப்ரரி இருக்கு, ஆனா படிக்க அவ்வளவா புத்தகங்கள் இல்லை" என்று சொன்ன மாணவியின் விருப்பத்தை தட்டாமல் உடனடியாக நிறைவேற்றி இருக்கிறார் கனிமொழி.
3 வருடங்களுக்கு முன்பே இந்த தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் கனிமொழி.
அதற்காக வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை தத்தெடுத்து, பஸ் ஸ்டாண்ட், ஹெல்த் சென்டர் என அனைத்தையும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்து தந்தவர்.
கிராம சபை கூட்டம்
மாவட்டத்தில் நல்ல பெயர் ஒரு பக்கம், நாடார் இன மக்கள் ஆதரவு மறுபக்கம் என கனிமொழி முன்னணியிலேயே உள்ளார். அதனால்தானோ என்னவோ கிராம சபை கூட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
சின்ன சின்ன விஷயங்கள்
பொங்கல் முடிந்ததும் தூத்துக்குடிக்கு வந்தவர்தான், தொடர்ந்து 10 நாள் அங்கேயே தங்கி எல்லா கிராம சபை கூட்டத்தையும் நடத்திவிட்டுதான் ஊர் திரும்பினார். கூட்டங்களின்போது நடைபெற்ற சின்ன சின்ன விஷயங்களில்கூட தொகுதி மக்களின் கவனத்தை கனிமொழி நிறையவே ஈர்த்தார்.
புத்தகம்
குறிப்பாக மஞ்சநாயக்கன்பட்டி என்ற கிராமத்துக்கு சென்ற கனிமொழியிடம், "புத்தகம் படிப்பது எனக்கு பிடிக்கும்" என்று ஒரு வார்த்தை சொல்லி முடிப்பதற்குள், தனது காரில் இருந்து 'பாரதிதாசன் கவிதைகள்' புத்தகத்தை எடுத்து தந்தாராம் கனிமொழி.
லைப்ரரி இருக்கு
அதேபோல, கக்கரம்பட்டி என்ற கிராமத்தில் அகிலா என்ற மாணவி, "அக்கா... எங்க ஊருல லைப்ரரி இருக்கு, ஆனா படிக்க அவ்வளவா புத்தகங்கள் இல்லை" என்று சொல்லி இருக்கிறார். உடனே கனிமொழி, சென்னையில் உள்ள ஆபீசில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் அகிலா கேட்ட லைப்ரரிக்கு அனுப்ப சொல்லி விட்டார். 2 நாளில் 300 புத்தகங்கள் லைப்ரரிக்கு வந்து சேர்ந்ததாம்.
நினைவு பரிசு
இந்த புத்தகங்கள் எல்லாம் நினைவு பரிசாக கனிமொழிக்காக அளிக்கப்பட்ட புத்தகங்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி, சின்ன விஷயமே என்றாலும் உடனுக்குடன் கனிமொழி நிறைவேற்றி கொடுத்து, தொகுதி பெண்கள், மாணவர்களின் மனதில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறாராம்.