குரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்
சென்னை: இந்தி திணிப்பு தொடர்பாக நேற்று திமுக எம்பி கனிமொழி செய்த டிவிட் ஒன்று தேசிய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியை பார்த்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழி இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், சிஐஎஸ்எஃப் வீரர், அவரை இந்தியரா என்று கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கனிமொழி செய்து இருந்த டிவிட்டில், விமான நிலைய காவலரிடம் இந்தி தெரியாது என்று கூறியதற்கு நீங்கள் இந்தியரா என்று கேட்டனர். இந்தி தெரிந்தால் மட்டும்தான் இந்தியரா? இந்தி பேசுபவர்தான் இந்தியர் என்ற நிலை எப்போதில் இருந்து உள்ளது, என்று கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.
வைரல் ஆனது
தமிழக மக்கள் இடையே கனிமொழி செய்து இருந்த இந்த டிவிட் கொதிப்பை ஏற்படுத்தியது. ஒரு பெரிய தலைவர், தேசிய அளவில் தெரிந்த எம்பி ஒருவருக்கே இந்த நிலைதான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, சாதாரண தமிழர்கள் மீது எப்படி எல்லாம் இந்தி திணிக்கப்படும். இனி வரும் நாட்களில் எப்படி எல்லாம் அழுத்தம் கொடுக்கப்படும் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தமிழக அளவு
முதலில் தமிழக அளவில்தான் இது தொடர்பாக விவாதம் வைக்கப்பட்டது. ஆனால் தமிழகம் போலவே மொழி மீது அதிக பற்று கொண்ட கர்நாடகாவை சேர்ந்த மக்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள். கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூரில் இருக்கும் இந்தி ஆதிக்கம் குறித்து தீவிரமாக குரல் கொடுக்க தொடங்கினார்கள். கன்னட மொழியில் இந்தியை திணிக்கிறார்கள் என்று கர்நாடக மக்கள் குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
துணை நிற்க வேண்டும்
கனிமொழிக்கு துணை நிற்க வேண்டிய நேரம் இது. அவருக்கு நேர்ந்தது மற்ற கன்னட மக்களுக்கும் நேரலாம். இதனால் தமிழக எம்பிக்கு கன்னட மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று கர்நாடகாவை சேர்ந்த மக்கள் குரல் கொடுத்தனர். இதற்காக நேற்று கன்னடம், இருமொழிக்கொள்கை என்று இரண்டு ஹேஸ்டேக்குகள் கர்நாடக மக்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது.
வங்காள மக்கள்
இது போக இன்னொரு பக்கம் வங்காளிகள் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். வங்கத்தில் இந்தி திணிப்பை நாங்கள் தடுக்க முடியவில்லை. தமிழகம்தான் மொழி கொள்கையில் எங்களுக்கு முன்னோடி. கனிமொழிக்கு நேர்ந்த அநீதியை நாங்கள் தட்டிக்கேட்போம். இக்கட்டான மொழி போரில் தமிழகத்தின் எம்பி கனிமொழியுடன் நாங்கள் உடன் நிற்கிறோம் என்று வங்காளிகள் குறிப்பிட்டுள்ளனர்.
என்ன ஆச்சர்யம்
இதெல்லாம் போக இன்னும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்றால், மராத்தியர்கள், பஞ்சாபிகள் என்று பலரும் நேற்று கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். வடஇந்தியாவை சேர்ந்த இந்தியை தாய்மொழியாக கொண்ட சிலரும் கூட கனிமொழிக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது விவாதத்தின் ஆழத்தை இன்னும் அதிகம் ஆக்கியது.
தமிழகம் எப்படி
இந்த விவாதம் எழுந்து இருக்கும் கால கட்டமும் மிக முக்கியமானது ஆகும். தற்போது மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழி திட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதிமுக, திமுக என்று தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் எல்லாம் இந்த மும்மொழி திட்டத்தை எதிர்த்து உள்ளது. இந்த நிலையில்தான் கனிமொழியின் டிவிட் இந்த எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளது.