சாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி
சென்னை: சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவருகிறது
இவர்கள் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் புழக்கம், பல குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது? இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.