கந்த சஷ்டி கவசம் சர்ச்சை : கருப்பர் கூட்டம் சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு
கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில் "கருப்பர் கூட்டம்" என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அருவெறுக்கத்தக்க ஆபாசமாக, ஹிந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரையும் அசிங்கப்படுத்தி மேற்கண்ட சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், இந்துமத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும். இது இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இருப்பதால், அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆஹா! அற்புதமான செய்தி! கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்!
அவர் மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14ஆம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால், அதில் தான் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.