கபசுர குடிநீரை கையில் எடுக்கும் சித்த மருத்துவர்கள்... கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமா..?
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் துறை வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது பற்றி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். அப்போது, கொரோனாவுக்கு ஆதார அடிப்படையில் மருந்து கண்டறியும் முயற்சியில் ஆயுஷ் துறை மருத்துவர்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மூத்த சித்த மருத்துவரும், பேராசிரியருமான ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என யாரும் எண்ண வேண்டாம் என்றும், ஆனால் அதே வேளையில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது. மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் வாதமாக உள்ளது.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீர் உருவாக்கப்படுவதால் இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பதும் சித்த மருத்துவர்களின் கூற்றாகும். கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் எனக் கருதி கபசுரக் குடிநீர் மீது பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.