அனில் அம்பானியை விமர்சிக்கனும்.. ஆதரவாகவும் வாதாடனும்.. கபில் சிபல் நிலை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலுக்கு தர்ம சங்கடமான நிலைமை. ஒரு பக்கம் வழக்கறிஞராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
அதேநேரம், மற்றொரு பக்கம், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதியாக அனில் அம்பானியை விமர்சனமும் செய்தாக வேண்டும்.
இப்படியாக இரு படகில் பயணித்து வருவதால், கபில் சிபலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுவதும் அதிகரித்துள்ளது.
|
குற்றம்சாட்டி ட்வீட்
சமீபத்தில் கபில் சிபல் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், "2015ம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் 11ம் தேதிக்குள், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றபோது, ரபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி, ஏர்பஸ், பிரான்ஸ் அரசு, அனில் அம்பானி என அனைவருக்கும் தெரியும் என்பது தெளிவாகிறது" என்று கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், எரிக்ஷன் இந்தியா நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானிக்கு ஆதரவாக வாதிட்டுக்கொண்டிருந்தார்.
குற்றம்சாட்டும் நபர் வக்கீல்
பாஜக இந்த விஷயத்தை சும்மா விடுமா? அக்கட்சி செய்தித் தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான நளின் கோஹ்லி இதுபற்றி கூறுகையில், வழக்கறிஞர் என்ற முறையில், எந்த வழக்கிலும் ஆஜராக கபில் சிபலுக்கு தடை இல்லை. ஆனால், அனில் அம்பானி விஷயத்தில், குற்றம்சாட்டும் நபருக்கு, ஆதரவாகவும் வாதிட வேண்டிய நிலை அவருக்கு உள்ளது. இரண்டில் ஒரு விஷயத்தைதான் அவர் கையில் எடுக்க வேண்டும் என்றார்.
கபில் சிபல் விளக்கம்
இதுகுறித்து கபில் சிபல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "எரிக்சன் வழக்கில்தான் நான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு ஆதரவாக ஆஜராகிறேன். இந்த வழக்கிற்கும் ரபேல் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை. அனில் அம்பானி கார்பொரேட் நிறுவன எம்.டி. கடந்த 20 வருடங்களாக அவருக்கு நான் ஆஜராகி வருகிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
தப்பில்லை பாஸ்
இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், அனில் அம்பானி விவகாரத்தில் கபில் சிபல் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார் என்றே கருதுகிறோம். தொழில்ரீதியாக திறமையான வழக்கறிஞராக கபில் சிபல் அறியப்படுவதால் அவர் பல வழக்குகளில் ஆஜராகிறார். இதில் தவறில்லை என்றார்.