கொரோனா- சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி- அடுத்தும் முதல்வரே..கராத்தே தியாகராஜன் திடீர் புகழாரம்
சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி; அவரே அடுத்த முதல்வர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதன்பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழருவி மணியனைப் போல அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டவர் கராத்தே தியாகராஜன்ன். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கே வரவில்லை என அதிரடியாக அறிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை ஒரு தன்னெழுச்சி போராட்டம் என கூறியிருந்தார் கராத்தே தியாகராஜன். காங்கிரஸிலும் தொடர முடியாமல், ரஜினிகாந்தும் கைவிட்ட நிலையில் தமது ஆதரவாளர்களுடன் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சென்னையில் திங்களன்று ஆலோசனை நடத்தினார் கராத்தே தியாகராஜன்.
எடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் எடப்பாட்டி பழனிசாமி மிக சிறப்பாக செயல்பட்டார்; தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமியே தொடருவார். அதிமுக அல்லது பாஜகவில் இணைவது தொடர்பாக அடுத்த 10 நாட்களில் முடிவை அறிவிக்கிறேன் என்றார்.