500 ஆதரவாளர்கள் புடை சூழ.. ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்ற கராத்தே தியாகராஜன்.. திடீர் பரபரப்பு
சென்னை: காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன், இன்று திடீரென அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான, கராத்தே தியாகராஜன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி, சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கூறிய கருத்தை தொடர்ந்து தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அறியப்படும் கராத்தே தியாகராஜன், திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசித்து வருகிறார் கராத்தே தியாகராஜன். அவருடன் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் சிதம்பரம் இல்லத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் வெளியே நின்றபடி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறை கமிட்டி கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில்தான் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியிடம், கராத்தே தியாகராஜன் இதுவரை பேசவில்லை. நேரடியாக, அவர் சிதம்பரம் இல்லத்திற்கு சென்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று, கராத்தே தியாகராஜன், சிதம்பரம் மூலமாக கட்சி மேலிடத்துக்கு வலியுறுத்தி வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.