அன்று நெடுஞ்செழியனுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மறுத்தவர் மு.க. ஸ்டாலின்: கராத்தே தியாகராஜன் பொளேர்
சென்னை: மறைந்த திராவிடர் இயக்க தலைவர் நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது அவருக்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்க மறுத்தவர் அன்றைய மேயரும் இன்றைய திமுக தலைவருமான ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் பிரமுகரும் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் இன்று வெளியிட்ட அறிக்கை:
மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவை வருகிற ஜூலை11-ல் திமுக சார்பில் கொண்டாடப் போவதாக திமுக அறிவித்துள்ளது. அன்றைய தினம் அறிவாலயத்தில் நாவலர் நெடுஞ்செழியனின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தி போற்றப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக அரசு நிராகரிப்பு
அந்த அறிக்கையில் நெடுஞ்செழியன் நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்று சட்டசபையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் வலியுறுத்தினார் என்றும் அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்,. நெஞ்செழியனுக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்றார். ஓராண்டாகியும் அரசு எதுவும் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் கோரிக்கை
நெஞ்செழியன் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடுவதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் ஸ்டாலின், மறந்து போன சில நிகழ்வுகளை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 12.01.2000 அன்று நாவலர் நெடுஞ்செழியன் மறைந்து போனார். அப்போது ஜெயலலிதா, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நெடுஞ்செழியனை அண்ணாவுக்கு பக்கத்தில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை அன்றைய நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.எச். பாண்டியன், செங்கோட்டையன், ரகுபதி ஆகியோர் தலைமைச் செயலாளராக இருந்த முத்துசாமியிடம் நேரில் கொடுத்தனர்.
நிராகரித்த திமுக அரசு, ஸ்டாலின்
ஆனால் அப்போதைய திமுக அரசு அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதன்பின் பெசன்ட் நகர் மயானத்தில் நெடுஞ்செழியன் உடல் தகனம் செய்யபட்டது. நெடுஞ்செழியன் மறைந்த ஒரு வாரத்துக்குப் பின் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நெடுஞ்செழியன், முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அன்றைய மேயர் ஸ்டாலின் அலுவலகத்தில் 19.01.2000-ல் நான் காங்கிரஸ் கட்சி சார்பாக கடிதம் கொடுத்தேன். 20.01.2000 அன்று நடந்த மன்ற கூட்டத்தில் பிரபல தொழிலதிபர் எம்.ஏ. சிதம்பரம், திமுக கவுன்சிலர் தாமோதரன் ஆகியோர் இருவருக்கு மட்டும் இரங்கல் அனுசரித்துவிட்டு மன்றக் கூட்டத்தை ஸ்டாலின் ஒத்திவைத்தார்.
அத்தனை அவமானங்கள்
அண்ணாவால் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று பாராட்டப்பட்டவர் நெடுஞ்செழியன். 2 முறை பொறுப்பு முதல்வராக இருந்தவர். சங்கர் தயாள் சர்மா சுதந்திரப் போராட்ட தியாகி. முன்னாள் ஜனாதிபதி. இவர்களுக்கு இரங்கல் ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டேன். மரபு இல்லை என்று சொல்லிவிட்டு மன்ற கூட்டத்தை முடித்துவிட்டு சென்றுவிட்டார் ஸ்டாலின். இப்படி நெடுஞ்செழியனை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்திவிட்டு இன்று அறிவாலயத்தில் அவரது படத்தை திறந்து வைத்து அதிமுக அரசை குறை கூறி ஸ்டாலின் அரசியல் செய்கிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.