என்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை வயதானவர் என்று, மறைமுகமாக குறிப்பிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை குற்றம்சாட்டியுள்ளார், ரஜினிகாந்த் ஆதரவாளரும், காங்கிரசின் முன்னாள் பிரமுகருமான கராத்தே தியாகராஜன்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுக்க போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், வன்முறையில் யாரும் ஈடுபட கூடாது என அட்வைஸ் செய்திருந்தார். இருப்பினும் குடியுரிமை சட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தது, அரசுக்கு ஆதரவான போக்கு என சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் அது வைரலானது. பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் அவரை ஆதரித்து ட்வீட் வெளியிட்டனர்.
|
வயதான பெரியவர்
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில், தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கராத்தே தியாகராஜன்
வன்முறை என கூறும் வயதான பெரியவர் என உதயநிதி கூறியது ரஜினியைத்தான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. இந்த நிலையில், தமிழ் செய்தி சேனலில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கராத்தே தியாகராஜன் உதயநிதி மீது கடும் கோபத்தை காட்டியுள்ளார்.
ரஜினியைதான் சொன்னார்
கராத்தே தியாகராஜன் இதுபற்றி கூறுகையில், இன்றைய மாலை பத்திரிக்கையில், உதய நிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் நேரடியாக ட்வீட்டில் ரஜினி பெயரை கூறவில்லை. ஆனால் கலாநிதி வீராசாமி, உதயநிதி ரஜினிகாந்த்தை பற்றித்தான், இவ்வாறு கூறியதாக ஒரு டிவி சேனலில் பேட்டியளித்துள்ளார்.
ஸ்டாலினை சொல்கிறார்
நான் என்ன நினைக்கிறேன் என்றால், ரஜினியை பற்றி உதயநிதி சொல்லவில்லை. அவர் அப்பாவுக்குதான் (ஸ்டாலின்) வயதாகிவிட்டது. 97 வயதில் பொதுச் செயலாளர் க.அன்பழகன், அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஸ்டாலின் தோற்கிறார். ஸ்டாலின் தடுமாறுகிறார். எனவே தனது தந்தை பற்றிதான் உதயநிதி கூறியிருப்பார்.
கோபம்
1996ம் ஆண்டு, ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு சால்வை அணிவித்து ஓட்டு கேட்டார். அப்போது உதயநிதி சின்ன பையன். ரஜினிகாந்த் சென்று ஆதரவு கேட்கவில்லை. எனவே, குடும்பத்தில் அப்பா-மகனுக்கு நடுவே ஏதாவது பிரச்சினை இருக்குமா இருக்கும். இவ்வாறு கராத்தே தியாகராஜன் ஆவேசமாக தெரிவித்தார்.