ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் கராத்தே தியாகராஜன்... பதிலடிக்கு தயாராகும் ஜெ.அன்பழகன்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து சீண்டுவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான் காரணம் எனக் கருதும் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து அவரை சீண்டும் வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் அவருக்கு பதிலடி கொடுக்க சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் தயாராகிவிட்டார்.
மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு நியமனங்கள்- மோடி வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்
கருத்து வேறுபாடு
சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, துணை மேயராக கராத்தே தியாகராஜன் இருந்தார். அப்போது முதலே ஸ்டாலினுக்கும், காரத்தே தியாகராஜனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கராத்தே தியாகராஜன் இடம்பெயர்ந்தாலும் ஸ்டாலுனுடனான கருத்து வேறுபாடு தொடர்ந்த வண்ணமே இருந்தது.
கட்சியிலிருந்து நீக்கம்
திமுக கூட்டணியில் இருந்துகொண்டே கராத்தே தியாகராஜன் பேசிய சில விவகாரம் மு.க.ஸ்டாலினை கடும் கோபம் கொள்ளச் செய்தது. மேலும், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் அவர் பேசியது காங்கிரஸ் முன்னணி தலைவர்களை பலரையே திடுக்கிடச் செய்தது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து சீண்டல்
மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மேடைக்கு மேடை புகார் கூறும் கராத்தே தியாகராஜன் அண்மைக்காலமாக ஸ்டாலினை சீண்டும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நேற்று முன் தினம் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்டாலினுக்கும், ரஜினிக்கும் ஒட்டப்பந்தயம் வைக்கலாமா என்றும், ஸ்டாலின் என்ன இளைஞரா எனவும் பேசியிருந்தார்.
தக்க பதிலடி
இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த திமுக முகாம் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மூலம் பதிலடி தரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் கோபத்துக்கு கராத்தே தியாகராஜன் ஆளானது உள்ளிட்ட சில பழைய விவகாரங்களை கிளப்ப உள்ளது திமுக.