2021 தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி.. அதிமுக என்னவாகுமோ?- கராத்தே தியாகராஜன்
Recommended Video
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டியாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் கராத்தே தியாகராஜன் பேசியிருந்தார். அதாவது உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே என் நேரு, திமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பியிருந்தார்.
கூட்டணி விரிசல்
இந்த நிலையில் கூட்டணிக்கிடையே விரிசல் ஏற்படுத்தும் நிலையில் கராத்தே பேசியதாக அவர் தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து ரஜினி கட்சி தொடங்க கராத்தே ஆர்வம் காட்டியதும் இந்த நடவடிக்கைக்கு காரணம் என சொல்லப்பட்டது.
பலமான கூட்டணி
இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது கராத்தே தியாகராஜன் கூறுகையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் கட்சியை தொடங்கிவிடுவார். பலமான கூட்டணியின் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.
முதல்வர் வேட்பாளர்
அது போல் ரஜினியும் கட்சி தொடங்கிவிட்டால் இவரது பின்னால் சில அணிகள் திரளும். அப்படி வந்தால் ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். ரஜினி கட்சி தொடங்கினால் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியாளராக இருப்பார்.
ஓரணியில்
ரஜினியுடன் அணி திரள அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், சமுதாய கட்சி ஆகிய கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமியும் ரஜினியை சந்தித்துவிட்டுதான் வந்தார். ரஜினி கட்சி தொடங்கி இவர்கள் எல்லாம் ஓரணியில் திரளும் வகையில் அரசியல் அதிர்வு கட்டாயம் நடக்கும்.
செலிபிரிட்டி
ரஜினி கட்சி ஆரம்பித்தால் பெரிய கூட்டணி உருவாகுமா, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அவர் தலைமையில் செல்வரா என தெரியவில்லை. ரஜினிகாந்தை யாரும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் ஒரு செலிபிரிட்டியிடம் நான் நட்பு வைத்துக் கொள்வதில் என்ன தவறு.
இரு முனை போட்டி
எனவே சட்டசபை தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ரஜினிக்கும் இடையே மும்முனை போட்டி நிலவாது. இரு முனை போட்டிதான். அது ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் இடையேதான். நான் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதாக கூறுவது தவறு. திமுக- காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கியவன் நான்தான். ரஜினிக்கு எல்லோருடனும் நெருக்கம் இருந்து வருகிறது. காங்கிரஸில்தான் எப்போதும் எனது பயணம் இருக்கும் என்றார் கராத்தே தியாகராஜன்.