பரபர சென்னை! கேஎஸ்ஆர்டிசி பஸ்-லாரி மோதி தீப்பிடித்ததால் ஷாக்! அலறிய பயணிகள்-22 பேர் தப்பியது எப்படி
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் கர்நாடக அரசுக்கு சொந்தமான ஏசி பஸ், லாரி ஆகியவை திடீரென மோதிக்கொண்டதில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. இந்த வேளையில் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து கீழே குதித்ததால் 22 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக இருமாநிலங்கள் இடையே தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான ஐராவதா எனும் ஏசி பஸ் சென்னை கோயம்பேட்டுக்கு வந்து கொண்டிருந்தது. ஏசி வசதி கொண்ட இந்த பஸ்சில் 22 பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர். இதற்கிடையே தான் அடுத்த சில நிமிடங்களில் இருவாகனங்களும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
பஸ்சின் முன்புறம் தீப்பற்றி எரிந்தது. பஸ்சில் உள்ள டிரைவர் இருக்கை மற்றும் பயணிகள் ஏறி, இறங்குவதற்கான வாசற்படி உள்ள பகுதிகள் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனால் பயந்துபோன பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து தப்பிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்களின் உடைமைகளை கையில் எடுத்து கொண்டு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து கீழே குதித்தனர். 22 பயணிகளும், 2 டிரைவர்களும் விரைந்து பஸ்சில் இருந்து வெளியேறியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பிறகு சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்த பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த விபத்து என்பது சென்னை -பெங்களூர் சாலையில் நடந்தது. இதனால் அந்த சாலையில் இன்று அதிகாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications