மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.. முதல்வர் கடிதம்
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் செயல்படுவதாக, தமிழக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கை குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரும் 19-ம் தேதி ஆலோனை நடத்த உள்ளது. மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை அப்போது பரிசீலிக்கப்பட உள்ளது
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி இவ்விகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில், மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணைத்திட்டம் பற்றி சுற்றுச்சூழல் வனத்துறை கூட்டத்தில் விவாதிப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. மேலும் காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பிற்கும் எதிரானது என முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேகதாது அணை தொடர்பாக தமிழகத்தின் ஒப்புதலையும், இதுவரை கர்நாடக அரசு பெறவில்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழகத்தின் அனுமதியை பெறாமல் தான் காவிரிக்கு குறுக்கே ரூ.9,000 கோடி மதிப்பில், தமிழக எல்லையில் 3 கிமீ தொலைவில் புதிய அணை கட்ட கர்நாடகம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
எனவே நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் கோரிக்கையை, 19-ம் தேதி நடைபெற உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் நிராகரிக்க வேண்டும் என முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.