காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரில் உரிய பங்கை வழங்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத கர்நாடகா அங்குள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை தன் சொந்தத் தேவைக்காக பயன்படுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயல் கடும் கண்டனத்திற்குரியது என சாடியுள்ளார்
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராமதாஸ் அதில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் தர உத்தரவிட்டு 4 வாரங்களாகிறது. தற்போது வரை தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட கர்நாடகம் திறக்கவில்லை.
தங்களது அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால், பருவமழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகம் கூறி வருகிறது.
ஆனால் கர்நாடகத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் உள்ள நீரையும், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரையும் காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட எந்த அமைப்பின் அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக அம்மாநிலம் பயன்படுத்துவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
கடந்த 3 வாரங்களில் மட்டும் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் இருந்து 2.544 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்தியிருக்கிறது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் இப்போது வரை மேற்கண்ட 4 அணைகளுக்கும் 1.814 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ள நிலையில், அந்த நீரையும் ஏற்கனவே அணைகளில் இருந்த நீரையும் சட்டவிரோதமாக தனது பாசனத் தேவைகளுக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது பெரும் அநீதி என சாடியுள்ளார்
காவிரி நீர் பகிர்வு குறித்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடகம் மறுத்து வந்தது என்பதால் தான் தமிழகம் மிக நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கச் செய்தது. ஆணையம் அமைக்கப்பட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிடப்பட்ட பிறகும் கூட, அதை மதிக்காமல் கர்நாடக அரசு காவிரி நீரை அதன் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி கொண்டு வருகிறது
இந்த நிலை வருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பு எதற்காக செயல்பட வேண்டும்? அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தான் என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்படாததே இந்த நிலைக்கு காரணம்.
எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.