செந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை
சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது சிவகங்கை தொகுதி! வேட்பாளர்களும் ஜரூராக தயாராகி வருகிறார்கள்.
இப்போதைக்கு அதிமுக சிட்டிங் எம்பி செந்தில்நாதன். திரும்பவும் இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறாராம். அந்த தொகுதி மக்களும் இவரை ரொம்பவே விரும்புகிறார்கள். காரணம், ரொம்பவும் எளிமையானவர் செந்தில்நாதன்.
கட்சி நிர்வாகியோ, தொண்டனோ யாராக இருந்தாலும் அவர் வீட்டுக்கு போன் போட்டு உரிமையாக பேசுவாராம். கட்சியையும் தொகுதிக்குள் திறமையாகவே நடத்தி வருபவரும்கூட. இவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் சாதி பலமும் இவருக்கு ஏற்கனவே கிடைத்து வெற்றிபெற்றதை போல இந்த முறையும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இவருக்கு செல்வாக்கு நிறையவே இருக்கிறது.
கே.எஸ்.அழகிரி
ஆனால் இந்த தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கிறது காங்கிரஸ். என்னாடா... இன்னும் கட்சி தலைமை பொறுப்பேற்று விசுவாசத்தை கே.எஸ். அழகிரி இன்னும் காட்டவில்லையே என்று பார்த்தால், இதோ... கார்த்திக் சிதம்பரம் ரெடி! அவரைதான் காங்கிரஸ் களமிறக்க போவதாக கூறப்படுகிறது.
முக ஜாடை
அம்மா நளினி சிதம்பரத்தின் மீதான புகார், தந்தை-மகன் இருவர் மீதான சிபிஐ ரெய்டு இதையெல்லாம் தாண்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார். சிதம்பரம் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். சாதி ஓட்டுக்கள் எக்கச்சக்கமாகவே விழும். ப.சிதம்பரத்தின் முக ஜாடை இவருக்கு இருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.
கடும் போட்டி
எல்லாவற்றிற்கும் மேலாக துடிப்பு மிக்க இளைஞன் என்பதால் பலமான வேட்பாளராக திகழ்வார் என்று பார்க்கப்படுகிறது. அதனால் செந்தில்நாதனும், கார்த்திக் சிதம்பரமும் நிறுத்தப்பட்டால் கண்டிப்பாக இருவருக்கும் டஃப் இருக்கும் என்றே தெரிகிறது. ஒருவரையொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால் பலமான போட்டி இருக்கும் என்கிறார்கள்.
எச்.ராஜா
இப்போது ஹைலைட் என்னவென்றால், ஒருவேளை அதிமுக சார்பில் பாஜக இங்கு போட்டியிட போவதாக கொண்டால், அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் யாராக இருக்கலாம்? எச்.ராஜாவுக்கு சீட் கொடுக்கப்படலாம்.. ஏனெனில் அவருக்கு காரைக்குடி சொந்த ஊர் என்பதால்தான்.
அடித்து சொல்கிறார்கள்
ஆனால் செந்தில்நாதனுக்கு பதில் கார்த்திக்கை எதிர்த்து நிற்க வைக்கப்பட்டால், கண்டிப்பாகவும், நிச்சயமாகவும், உறுதியாகவும் ஜெயிக்க போவது கார்த்திக் சிதம்பரம்தான் என்று அடித்து கூறுகிறார்கள் தொகுதி மக்கள். எச்.ராஜா மட்டும் நின்றால் ரொம்ப ரொம்ப ஈசியாகவே கார்த்திக் ஜெயித்து விடுவார் என்றும் சொல்கிறார்கள்.