கோதாவரி.. மறுபடியும் கட்சி ஆரம்பிச்சிருக்கேன்.. மாலை எடுத்து வாடி..கலகலக்கும் கார்த்திக்கின் அரசியல்
Recommended Video
சென்னை: இப்படியே கட்சி கட்சியாக ஆரம்பித்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் தீவிர அரசியலில் இறங்குவீர்கள் மிஸ்டர் சந்திரமௌலி?
நடிகர் கார்த்திக் என்றால் நவரச நாயகன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அரசியலில் இருக்கிறார் என்று கூறினால் அப்படியா என கேட்பர். அந்த அளவுக்கு எந்தவித "ஆடம்பரமும் இல்லாமல்" கட்சியை நடத்தி வருகிறார்.
அதாவது தேர்தலின் போது மட்டுமே வெளியே வந்து தானும் ஒரு அரசியல்வாதி என்பதை காட்டுவார். அத்தோடு சரி. தேர்தலில் கூட போட்டியிடுவாரா என்பது சந்தேகம்தான்.
நாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக்.. புதுக்கட்சி தொடங்கினார்!
தேவர்களை கொண்டு இயங்கும் கட்சி
இத்தகைய கார்த்திக் 2009-ஆம் ஆண்டு ஃபார்வார்டு பிளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் அதே ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒன்றை உருவாக்கினார். முழுக்க முழுக்க தேவர்களை கொண்டு இயங்கி வரும் ஜாதிய கட்சியாகவே இருந்தது.
ஜெயலலிதா ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை
இதில் கார்த்திக்கின் ரசிகர்களும் இணைந்திருந்தனர். கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அவரது கட்சி 25 முதல் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கார்த்திக் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ஜெயலலிதா ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை.
புதிய கட்சி
இதையடுத்து அவரது வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதனால் திரைமறைவுக்கு போனவர் கார்த்தி வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கியுள்ளார்.
களத்தில் நிற்கும்
அப்போது செய்தியாளர்களிடம் கார்த்திக் கூறுகையில் இன்றில் இருந்து நான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தூத்துக்குடி ஸ்டெர்லைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கூறியுள்ளார்.
உருப்படியாக
இதுபோல் கட்சி மேல் கட்சி தொடங்கி வரும் கார்த்திக் இதுவரை ஒருமுறை கூட மக்களுக்காக போராடியதே இல்லை இந்த நிலையில் மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என கூறியுள்ளார். காகித பூக்கள் போல் வாய் வார்த்தைக்கு போராட்டம், மக்கள் நலம் என்று கூறிக் கொள்ளும் கார்த்திக் இது வரை உருப்படியாக எதையும் செய்ததில்லை.
மக்கள் நல பணிகள்
தென் தமிழகத்தில் கார்த்திக்கிற்கு என இளைஞர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் இவரது அரசியல் நிலையற்ற தன்மையால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். எத்தனையோ கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
அரசியலை விட்டு விலகுகிறேன்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் கார்த்திக்கோ, அவரது சம்பந்தப்பட்ட கட்சி சார்பிலோ யாரும் செல்லவில்லை. இது போல் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல் வெளியே வருவதும் தேவையின்றி ஒன்றை கலைத்து விட்டு மற்றொன்றை தொடங்குவதும், மதில் மேல் உள்ள பூனை போல் கார்த்திக் இயங்குவதற்கு பதில் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று கூறிவிடலாமே.
பல தருணங்களில்
புதிய கட்சி தொடக்க விழாவில் நான் இன்றிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன் என கார்த்திக் கூறியுள்ளார். இது போல் அவர் பல தருணங்களில் கூறியுள்ளார் என்பது அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ நமக்கு நினைவிருக்கிறது.
எத்தனை நாட்களுக்கு...
எனவே கார்த்திக்கின் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்
என கூறியுள்ளதை பார்க்கும் போது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு தனது இளைய மகன் பாரதி குறித்து நகைச்சுவையாக கூறுவார். அது போல் கார்த்திக்கும் தீவிர அரசியலில் இறங்குவதாக கூறினார்... தீவிர அரசியலில் இறங்குகிறார்... தீவிர அரசியலில் இறங்கவுள்ளார் என்றே கூறத் தோன்றுகிறது. இந்த கட்சியை கலைத்துவிட்டு வேறு கட்சி தொடங்காமல் இருந்தால் சரி மிஸ்டர் சந்திரமௌலி.