திமுகவில் சுற்றுச்சூழல் அணி... மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமனம்..!
சென்னை: திமுகவில் சுற்றுச்சூழல் அணி என்ற புதிய அணி தொடங்கப்பட்டு அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக சட்டதிட்ட விதி 31 ன்படி இந்த அணி உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் நியமனம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தடை கடந்து பரப்புரை தொடரும்.. போலீஸ் அதிகாரிகள் பின் விளைவை சந்திப்பார்கள்- திமுக அதிரடி தீர்மானம்
சுற்றுச்சூழல்
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கு எதிரான, ஒருதலைப்பட்சமான, எதிர்காலம் குறித்த எண்ணம் சிறிதுமில்லாத நடவடிக்கைகள், மனித குலத்திற்கே சவால் விடுவதாகவும் - வேளாண் நிலங்களைப் பறிப்பதாகவும் - சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தமது உயிருக்கு நிகராகப் போற்றி வைத்திருக்கும் நிலங்களைச் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ளும் போக்கினை அரசுகள் கையாள்வது அதிகரித்து வருகிறது.
திமுகவில் புதிய அணி
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், தூத்துக்குடி பகுதியில் ஸ்டர்லைட் ஆலை, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, தமிழ்நாடு முழுவதும் எண்ணெய்க் கிணறுகள் - போதாக்குறைக்கு இப்போது ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்று சுற்றுச்சூழல் - கடல்வளம் - நிலவளம் ஆகியவற்றிற்கு எதிரான ஆட்சியாளர்களின் அணுகுமுறையினைத் தட்டிக் கேட்டுத் திருத்துவதற்கும் - தேவைப்படும்போது போராடுவதற்கும் - திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு அணியை உருவாக்கிட வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
குட்டப்பாளையம் சாமிநாதன்
அதனடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அவர்களால். "தி.மு.க. சுற்றுச்சூழல் அணி" உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கொங்கு நாட்டின் தலைதாழாச் சிங்கம், தன்மான முரசு, தமிழ் இனத்துச் சுடரொளி என்றெல்லாம் பலபடப் பாராட்டப்பட்ட மறைந்த குட்டப்பாளையம் சாமிநாதன் அவர்களின் பெயரன். பல்லுயிர் மற்றும் பாரம்பரிய கால்நடைப் பாதுகாப்பிற்காகப் பாடுபட்டு வரும் இவர் - "நீரின்றி அமையாது உலகு" என்று, கல்லூரி மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
பொருத்தமான நபர்
ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ரியோ உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சித் திட்டம் ஆகிய பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். ஆகவேதான் மிகப் பொருத்தமான இவரது பொறுப்பில், கழகத்தின் சுற்றுச்சூழல் அணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் - கழக மாவட்டச் செயலாளர்களும், தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள "சுற்றுச்சூழல் அணிக்கு" மாபெரும் ஆதரவினை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.