Exclusive: லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கப் போகிறேன்.. கார்த்திகேய சேனாபதி ஓபன் டாக்
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைப்பேன் எனத் தெரிவிக்கிறார் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சேனாபதி.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு ஒன் இந்தியா தமிழுக்கு அவருடைய முதல் பேட்டியை அளித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: திமுகவில் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை எப்படி உணர்கிறீர்கள்..?
பதில்: தலைவர் ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த அணியை உருவாக்கியுள்ளார். இந்திய துணை கண்டத்திலேயே ஒரு அரசியல் கட்சியில் சுற்றுச்சூழலுக்கு என தனி அணி உருவாக்கியிருப்பது திமுக மட்டுமே. மற்ற இயக்கங்களில் எடுத்துக்கொண்டால் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகள் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இதற்கென தனியாக அணி எதுவுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் திமுகவில் சுற்றுச்சூழல் அணியை தொடங்கி அதன் முதல் மாநிலச் செயலாளராக என்னை நியமித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. கட்சியில் இணைந்த சில நாட்களில் மிகப்பெரும் பொறுப்பை தலைவர் எனக்கு கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கொங்கு பகுதி மக்கள் மீது அவர் வைத்துள்ள பாசம்.
கேள்வி: உங்கள் குடும்பத்திற்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறுங்கள்..
பதில்: காங்கேயம் அருகே உள்ள குட்டப்பாளையம் தான் எனது சொந்த ஊர். எனது தாத்தா குட்டபாளையம் சாமிநாதன் 1949-ல் திமுக தொடக்க கால உறுப்பினர். திமுக சார்பில் வெள்ளக்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இப்போது வெள்ளக்கோவில் தொகுதி இல்லை. காங்கேயமாக மாறிவிட்டது. இதேபோல் பழனி நாடாளுமன்றத் தொகுதியில் அப்போதைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியனை எதிர்த்து திமுக சார்பில் எனது தாத்தா போட்டியிட்டார். இதுமட்டுமல்லாமல் அண்ணா ஆட்சிக் காலத்திலும், கலைஞர் ஆட்சிக்காலத்திலும் பல்வேறு அமைப்புகளின் சேர்மனாக இருந்திருக்கிறார் எனது தாத்தா. ஆகவே, எனது குடும்பம் திமுக பாரம்பரியம் மிக்கது.
கேள்வி: திமுகவின் சுற்றுச்சூழல் அணி மூலம் என்னவெல்லாம் செய்ய இருக்கீர்கள்?
பதில்: இன்று சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட எத்தனையோ இளைஞர்கள் குளம் தூர்வாருவது, மரம் நடுவது, குப்பைகளை அகற்றுவது என தனியாகவோ அல்லது தன்னார்வலர்கள் இணைந்தோ ஒரு குழுவாக செயல்படுவதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கு முறையாக ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் இருக்காது. இனி, திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற எண்ணமுடைய லட்சக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைப்பேன்.
கேள்வி: முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டீர்கள், இதனால் உங்கள் பழைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுமோ?
பதில்: அப்படியெல்லாம் ஆகாது, வழக்கம் போல் எனது பழைய செயல்பாடுகள் தொடரும். பாரம்பரிய கால்நடைகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடத்துவது, என சுற்றுச்சூழல் சார்ந்தே நான் செயல்பட்டு வருகிறேன். அப்படியிருக்கும் போது அதில் எப்படி சுணக்கம் ஏற்படும். இப்போது கட்சியின் அங்கீகாரமும் கிடைத்திருப்பதால் இன்னும் கூடுதலாக இந்த விவகாரங்களில் செயல்பட முடியும்.
கேள்வி: மாவட்ட வாரியாக சுற்றுச்சூழல் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் எப்போது நடைபெறும்?
பதில்: தலைவர் ஸ்டாலினுடன் இது குறித்து ஆலோசித்து அவர் தரக்கூடிய ஆலோசனைகள் மூலம் செயல்படுவேன். மேற்கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இது தொடர்பாக கலந்துபேசி விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்.