ப.சிதம்பரத்துக்கு கணக்கில் காட்டாத சொத்து.. ஒரு துளி ஆதாரத்தையாவது அரசு வெளியுடுமா.. கார்த்தி கேள்வி
சென்னை: சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை என கார்த்தி சிதம்பரம் எம்பி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த சில நாட்களாக ப. சிதம்பரம் குறித்து சில ஊடகங்கள் ஆராயாமல் , ஆதாரமற்ற, அத்துமீறி சில கருத்துகளை வெளியிட்டு வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை எல்லாம் சொல்ல முடியாது.. ப.சி வழக்கில் சிபிஐக்கு கபில் சிபல் பொளேர்!
|
அவதூறு
ப. சிதம்பரத்தை அவமானப்படுத்தவும் அவதூறு சொல்லவும் மத்திய அரசின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவதூறு கருத்துகளை எதிர்த்து சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு செயல்படாதது வேதனையை அளிக்கிறது.
கண்ணியம்
சட்டத்தின் ஆட்சிதான் எங்களையும் ஊடகங்களையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகங்கள் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும்.
நம்பிக்கை
50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ள ப. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். சிதம்பரத்தின் பங்களிப்பை அவதூறு குற்றச்சாட்டால் அழித்துவிட முடியாது. இறுதியில் நிச்சயமாக உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.
பணம்
நாங்கள் போதுமான சொத்துகளை வைத்துள்ள சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் வருமான வரியை தவறாமல் செலுத்திவிடுகிறோம். சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை.
அரசால் முடியுமா
பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இவையெல்லாம் கட்டுக் கதைகள். இவை நிச்சயம் ஒரு நாள் அழிந்து போகும். கணக்கில் காட்டாத சொத்து ப. சிதம்பரத்துக்கு உள்ளதாக ஒரு துளி ஆதாரத்தையாவது அரசால் வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.