ஒரே வரிசையில் ஆத்திகமும்... நாத்திகமும்... கருணாநிதி படத்திறப்பு விழாவில் நடைபெற்ற சுவாரஸ்யம்..!
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே வரிசையில் அமர்ந்து கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
அதிமுகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் இந்த விழாவில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சென்னையில் யூடர்ன் அடித்த கொரோனா கேஸ்கள்.. 7 டாஸ்மாக் கடைகள் மூடல்.. விவரம் இதோ!
திமுகவுக்கு எதிராக தீவிர அரசியல் செய்து வரும் பாஜகவே தங்கள் கட்சி சார்பில் அண்ணாமலையை விழாவுக்கு அனுப்பி வைத்து கருணாநிதி மீதான தங்கள் மரியாதையை வெளிப்படுத்தியுள்ளது.
படத்திறப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டப்பேரவையில் திறந்து வைத்தார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், அண்ணாமலை, கே.எஸ்.அழகிரி. கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலரையும் சபாநாயகரும், துணை சபாநாயகரும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
முதல் வரிசை
அவையின் மையப்பகுதியிலிருந்து இடது புறம் அமைக்கப்பட்ட இருக்கைகளின் முதல் வரிசையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், அண்ணாமலை ஆகியோர் அமர வைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பர வணக்கம் வைத்துக்கொண்டனர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் அமைச்சர்கள் அனைவரும் அண்ணாமலையின் வருகையை ஆச்சரியத்தோடு பார்த்தது தான்.
ஆச்சரியம்
இந்த விழாவின் ஆச்சரியமாக கருதப்படும் விவகாரம் என்னவென்றால், அண்ணாமலையே நேரடியாக அந்த விழாவில் கலந்துகொண்டது தான். அவர் நினைத்திருந்தால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் ஆகியோரை பாஜக பிரதிநிதிகளாக அங்கு அமர வைத்திருக்கலாம். ஆனால் அதை தவிர்த்து அவரே நேரடியாக சென்றிருக்கிறார் என்றால் அதற்கு அரசியலில் பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.
வைகோ நெகிழ்ச்சி
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சற்று நெகிழ்ச்சியுடன் இந்த விழாவில் காணப்பட்டார். கருணாநிதியின் உருவப்படத்தை திறந்த போதும் அவரை பற்றி ஆளுநரும், குடியரசுத் தலைவரும் புகழுரை வாசித்த போது உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். இதேபோல் ஸ்டாலினும் மிகப்பெரிய நிகழ்வை நிகழ்த்திக்காட்டிய பூரிப்புடன் காணப்பட்டார்.இதனிடையே பாமக சார்பில் ஜி.கே.மணியை விழாவுக்கு அனுப்பி வைத்து கருணாநிதி மீதான தனது மரியாதையை ராமதாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.