தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் பானை, கரும்பு அலங்காரத்துடன் கருணாநிதி நினைவிடம்..!
கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி மெரினாவில் உள்ள மறைந்த கருணாநிதி நினைவிடம் பொங்கல் பானை, கரும்பு என அலங்காரம் செய்யப்பட்டு, தை 1 தமிழ் புத்தாண்டு என எழுதப்பட்டுள்ளது.
தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் கருணாநிதி. இதற்காகவே தன்னுடைய ஆட்சி காலத்தில் சட்டமும் இயற்றினார்.
ஒவ்வொரு வருட பொங்கல் பண்டிகை அன்று தன்னை சுற்றி பெரிய தொண்டர் படையை கூடவே வைத்திருந்து, அவர்களை உற்சாகப்படுத்துவார் கருணாநிதி. தொண்டர்களும் ஏராளமான பூச்செண்டுகள், சால்வைகளை கொடுத்து தங்கள் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பார்கள்.
10 ரூபாய் பரிசு
பொங்கல் பண்டிகை அன்று கோபாலபுரமே களை கட்டி இருக்கும். தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுக்கு அவர் எப்பவுமே 10 ரூபாய் தருவது வழக்கம். 10 ரூபாயே என்றாலும் அதனை தொண்டர்கள் அவ்வளவு ஆசையாக வாங்கி சென்று பொக்கிஷமாக வைத்திருப்பார்கள்.
ஸ்டாலின் அழைத்து வந்தார்
ஆனால் போன வருஷம் அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், தொண்டர்களை சந்திப்பது சந்தேகம்தான் என சொல்லப்பட்டது. எனினும் வெளியே வந்துதொண்டர்களை சந்திக்க முடியாவிட்டாலும், கருணாநிதியை கைத்தாங்கலாக ஸ்டாலின் அழைத்து வெளியே வந்தார்.
கையசைத்தார்
அப்போது நீண்ட நாட்கள் கழித்து கருணாநிதியைப் பார்த்த தொண்டர்கள், குஷியாகி, ‘தலைவர் கலைஞர் வாழ்க' என உற்சாக முழக்கமிட்டனர். தொண்டர்களை பார்த்ததும் கருணாநிதியும் கையை காட்டினார். பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் திரும்பவும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
கோபாலபுரம்
ஆனால் இந்த முறை கருணாநிதி உயிரோடு இல்லை. கோபாலபுரமும் களை இழந்து காணப்பட்டது. அதனால் தை மகளை ஆசையுடன் வரவேற்பவர் கருணாநிதிஎன்பதால், மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தமிழ்ப் புத்தாண்டு
நினைவிடத்தில் பொங்கல் பானை, கரும்பு என அலங்காரம் செய்யப்பட்டு, தை 1 தமிழ் புத்தாண்டு என எல்லாமே பூக்களால் எழுதப்பட்டுள்ளது. மெரினாவுக்கு வந்த மக்கள் இதனை நெகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டே சென்றனர்.