சண்முகநாதன் உடல் தகனம்.. இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்து அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்த சண்முகநாதன் மறைவால் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் துடித்துபோய் விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பிகாம், பிபிஏ பட்டம் வேண்டுமா?.. ரூ 3 லட்சம் வரை லஞ்சம்.. விசாரணையில் பகீர்
சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்தார். ''சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

உரிமையோடு சொன்னார்
நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, "அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி" என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

உருக்கமுடன் இரங்கல்
''அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர்மல்க கூறினார்.

ராசாத்தி அம்மாள்
தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த சண்முகநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மிகுந்த சோகத்தில் வெகு நேரமாக முதல்வர் ஸ்டாலின் அங்கேயே உட்கார்ந்து இருந்தார். மேலும், சண்முகநாதன் உடலுக்கு ராசாத்தி அம்மாள், தமிழக மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலரும் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி மரியாதை
இந்த நிலையில் சண்முகநாதனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது திருவுடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மூத்த அமைச்சர்களுடன் இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்த முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.