கருணாநிதிக்கு பிடித்த 'சங்கு மார்க்' வேட்டி... தொண்டர்கள் முதல் விஐபிக்கள் வரை வழங்கிய பரிசு
சென்னை: மறைந்த கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர் திமுகவினர்.
கருணாநிதி உயிருடன் இருந்தவரை சந்திக்க செல்லும் நிர்வாகிகள் அவர் விரும்பி அணியும் சங்கு மார்க் வேட்டியை தான் அவருக்கு பரிசாக அளிப்பார்கள்.
வெள்ளை நிறமும், இளநீல நிறமும் கலந்தவண்ணம் இருக்கும் சங்குமார்க் வேட்டியை கருணாநிதி விரும்பி அணிய காரணம் அதன் இலகு தான்.
கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று - கருணாநிதி எழுதிய முதல் கவிதை
சென்னை மண்ணடி
சென்னை மண்ணடியில் இயங்கி வரும் சங்கு மார்க் வேட்டி, கைலி தயாரிப்பு நிறுவனம் அரை நூற்றாண்டு கால பாரம்பரியமிக்கது. தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் இந்த பிராண்ட் பிரசித்தி பெற்றது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அணியும் லுங்கிகள் பெரும்பாலும் சங்கு மார்க் லுங்கிகளாக தான் இருக்கும்.
பிரத்யேகம்
இந்நிலையில் கருணாநிதியின் விருப்பத் தேர்வும் சங்கு மார்க் வேட்டிகள் தான். உடுத்துவதற்கு கணமில்லாமல் இலகுவான முறையில் நெய்யப்படுவதால் சங்கு மார்க் நிறுவனத்தில் இருந்து கருணாநிதிக்கு பிரத்யேகமாக அவ்வப்போது வேட்டிகள் அனுப்பி வைக்கப்படும். தங்கள் தலைவர் அணியும் பிராண்டையே கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி போன்றோரும் அணியத் தொடங்கினர். மேலும், கட்சியினரும் கருணாநிதியை சந்திக்க சென்றால் மற்ற பிராண்ட் வேட்டிகளை வாங்குவதை விட அவர் விரும்பி அணியும் சங்கு மார்க் வேட்டிகளையே பரிசு பொருளாக கொடுக்கத் தொடங்கினர்.
பெரும்பாலும் வேட்டிகள்
ஆரம்பக்காலங்களில் பட்டுச்சால்வைகள் அளித்து வந்த வி.ஐ.பி.க்களும், தொழிலதிபர்களும் காலப்போக்கில் அதனை தவிர்த்து கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப அவர் அணியக் கூடிய வேட்டிகளை அளிக்கத் தொடங்கினர். இதனிடையே இப்போது சால்வைகள், வேட்டிகளை தவிர்த்து சந்திக்க வரும் கட்சிக்காரர்களிடம் புத்தகங்களை பெற்று வருகிறார் ஸ்டாலின்.
சுகாதாரம்
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி நாளொன்றுக்கு இரண்டு முறை குளிக்கும் வழக்கம் உடையவர். அதேபோல் முகச்சவரமும் நாள் தவறாமல் முடிந்தால் நாளொன்றுக்கு இரண்டு முறை வீதம் செய்து தன்னை பளிச்சென வைத்துக்கொள்வார். சுகாதாரம் பேணுதலில் கவனம் செலுத்திய கருணாநிதி, சந்திப்புகள், பயணங்கள், அலைச்சல் காரணமாக தனது உடையையும் இரண்டு முறை மாற்றிக்கொள்வார்.