காட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலின் 6 பாகங்களையும் காட்சியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது;
நம் எல்லோருடைய உயிரோடு கலந்து உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர், நம் இல்லத்தில் அவர் எழில்நடை காட்டி உலவினால் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் மணக்கிறது, இனிக்கிறது அல்லவா? அதுவும், "நெஞ்சுக்கு நீதி"யே நம் கண்ணெதிரே வந்தால், எத்தனை இன்பம் தரும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்!
அதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு!
கலைஞர் தொலைக்காட்சி
புதிய பொலிவுடனும் பொருளுடனும் தகுதிமிக்க நவீனத் தரத்துடனும், தன் ஒளிபரப்பைத் தொடர்ந்து வரும் "கலைஞர் செய்திகள்" தொலைக்காட்சி வழியே, உடன்பிறப்புகளைக் காணவும் உற்சாகம் ஊட்டவும் வருகிறார், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.
அரசியல் அச்சாணி
சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் எவ்விதப் பின்புலமும் - தாங்கிப் பிடிக்கும் சக்திகளும் இல்லாமல், கொள்கையையும், அயராத உழைப்பையும் மட்டுமே உறுதுணையாகக் கொண்டு 5 முறை முதலமைச்சர் ஆனவர் தலைவர் கலைஞர் . எண்ணற்ற குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் அடையாளம் கண்டு உருவாக்கிய பேராற்றலாளர். அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்தவர். சக்கர நாற்காலியில் இருந்தபடியே டெல்லி சர்க்காரைச் சுழலவைத்தவர்.
விடாமுயற்சி
கலைஞரின் எழுத்துக்கள், பேச்சுக்கள், செயல்கள், விடாமுயற்சி, போராட்டக் குணம், உழைப்பு, கொள்கைப் பற்று, தளராமை, கண்துஞ்சாமை, காவல் திறன், இலக்கியம், திரை, போராட்டங்கள், வாதத் திறன், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரச்சாரம், டெல்லி அரசியல், கூட்டணிகளை உருவாக்குதல், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் நலன், பெண்கள் நலம், மாற்றுத் திறனாளிகள் நலன்,விளிம்பு நிலை மக்கள் மேம்பாடு - என அவரிடம் இருந்து ஒவ்வொருவரும் ஒன்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
முதுமை தடை
கலைஞர் அவர்களின் வரலாற்றை எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள். அவை எல்லாம் கலைஞரை வெளியில் இருந்து பார்த்து எழுதியது. "நெஞ்சுக்கு நீதி"தான், அவரே தன்னை உள்ளுக்குள் இருந்து பார்த்து எழுதியது. நெஞ்சுக்கு நீதி நூலின் ஏழாம் பாகம் முழுமை பெறுவதற்கு முன்பே கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டார்கள். முதுமை தவிர வேறு எந்த உடல்நலக் குறைவும் இல்லாமல், கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு பெறும் சூழ்நிலை உருவானது.
காட்சிகளாக தயாரிப்பு
நெஞ்சுக்கு நீதி நூல்கள் ஆறு பாகங்களாக படிக்கக் கிடைக்கின்றன. சுமார் நான்காயிரம் பக்கங்கள். அது இயக்க வரலாறு மட்டுமல்ல. அவரது இதயம் எழுதிய இந்திய வரலாறு. அந்த மொத்தப் பக்கங்களும் காட்சிகளாக வரப் போகிறது 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில். கலைஞர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இனி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகிறது.