ஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்
சென்னை: ஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவர, மத்திய அரசு தயாரா என்று, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தொண்டர்கள், திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: கருணாநிதி எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்தார். அதுபோல, தற்போது எதிர்நீச்சல் அரசியல் செய்யும் மமதா பானர்ஜியை கொண்டு அவரது சிலையை திறக்க வைத்துள்ளது மிகவும் பொருத்தமானது. விழாவுக்கு வந்து உள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் எதிர் நீச்சல் வீரர் தான்.
ஸ்டாலின் வெல்வார் என்று வைரமுத்து தெரிவித்தார். வைரமுத்து திருத்தக் கூடிய அளவுக்கு எழுதக் கூடியவர் அல்ல. ஆனாலும் நான் திருத்துகிறேன். வெல்வார் கிடையாது, வென்றார் ஸ்டாலின் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். லோக்சபா தேர்தல் முடிவுகளும், சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளும் அதற்கு சான்று.
ஒரே கலாசாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கட்சி, ஒரே மதம் என்று மத்தியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படி ஒரு சட்டம் போட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படி செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் மனுவின் மைந்தர்கள்.
கருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து!
ஆனால் சமத்துவத்தை வலியுறுத்தி, சமத்துவபுரம் அமைத்தார் கருணாநிதி. மேற்கு வங்காளத்தை பொறுத்தளவில் இந்திக்கு எதிராக தமிழகத்தைப் போலவே நிலைப்பாடு கொண்டவர்கள். வங்காளத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஒருமுறை நான் மேற்கு வங்கத்தை சேர்ந்த திராவிடன் என்று சொன்னார். இவ்வாறு வீரமணி பேசினார்.