கருணாநிதி சிலைத் திறப்பு.. பிரம்மாண்ட கட் அவுட்களுடன் விழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்
சென்னை: கருணாநிதி சிலைத் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதையடுத்து சிலை செய்யும் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதனிடையே அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியால் வைக்கப்பட்ட அண்ணா சிலை புனரமைப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி சிலையுடன் சேர்த்து அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டது.
ரஜினி, கமல்
இதையடுத்து இரு சிலைகளும் நாளை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளன. இந்த சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்பட தேசிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் ரஜினி, கமல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மூடல்
இதற்காக அண்ணா அறிவாலயமே விழாக் கோலம் பூண்டுள்ளது. அறிவாலயத்தின் வாயிலில் பிரம்மாண்ட ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
பொதுக் கூட்டம்
பின்னர் அதன் அருகே ஒரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் நின்றுதான் சோனியா காந்தி சிலைகளை திறந்து வைப்பார் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.
முக்கியத்துவம்
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த அண்ணா அறிவாலயம் போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள் ஒன்று திரளும் கூட்டம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.