சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் கருணாநிதி.. போராடி பெற்ற உரிமை!
Recommended Video
சென்னை: சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அந்தந்த மாநில முதல்வர்களே ஏற்ற வேண்டும் என்று போராடி உரிமையையும் பெற்றவர் கருணாநிதி.
தமிழக முதல்வராக ஐந்து முறை இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர்.
இதை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார்.
அனுமதி
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதற்கு இந்திரா காந்தியும் அனுமதி அளித்தார்.
ஆகஸ்ட் 15
அதன்படி, அனுமதி கிடைத்து, 1974 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் தேசியக் கொடியை ஏற்றினார். இதன் மூலம் சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதல்வர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார்.
உரிமைகளை எண்ணிய
இத்தகைய உரிமைகளை போராடி பெற்ற கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இயற்கை எய்தினார். அப்போது அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்ததை கண்ட மற்ற மாநில முதல்வர்கள், கருணாநிதி தங்களுக்கு பெற்று தந்த உரிமையை எண்ணி நெகிழ்ந்தனர்.
அமைதி ஊர்வலம்
இன்றைய தினம் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்னையில் நடைபெறுகிறது.