நாங்க இதை ஏற்க மாட்டோம்... இது ஜெயிக்காது.. எப்படிங்க ஏத்துக்க முடியும்.. கருணாஸ் ஆவேசம்
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருணாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுக பாஜக பாமக கூட்டணி படு தோல்வி அடையும் என்றும் ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடான கூட்டணி இது என்றும், கருணாஸ் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ். ஆனால் இவர் அதிமுகவை சார்ந்தவரா, அமமுகவை சார்ந்தவரா என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. இரு பக்கமும் போய்ப் போய் வருபவர்.
திடீரென அரசை எதிர்த்து பேசுவது, திடீரென முதல்வரை நேரில் சந்திப்பது, பிறகு திடீரென ஆதரவாக பேசுவது என மாறி மாறி நிலைப்பாட்டில் இருப்பவர் கருணாஸ். திடீரென சின்னம்மா புராணம் பாடுவார். திடீரென அம்மா புராணம் பாடுவார்.
ஆதரவு உண்டு
போன வாரம் சட்டப்பேரவையில், புலிப்படையாக இருந்தாலும் எந்த படையாக இருந்தாலும் தங்களை எப்போதும் வெல்ல முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அதற்கு, கருணாஸ், "இந்த முக்குலத்து புலிகள் பாசப்புலிகள். 5 ஆண்டுகள் தன்னுடைய ஆதரவு இந்த அதிமுக அரசுக்குதான்" என்றார்.
கூட்டணி கருத்து
ஆனால் இப்போது ஆளும் தரப்பை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், பாஜக-அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் சொன்னதாவது:
ஏற்க மாட்டோம்
பாஜக-அதிமுக கூட்டணி தமிழக மக்களுக்கு எதிரானது. பாஜக ஆட்சி எப்போதுமே தமிழர் நலனுக்கு விரோதமானது. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக இருக்கிறது. மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக் கூடாது. தமிழகத்தை அவர் வெறும் ஓட்டு வங்கியாக பார்க்கிறார். நான், தமிமுன் அன்சாரி, தனியரசு இந்தக் கூட்டணியை ஏற்கவே மாட்டோம்" என்றார்.
நாண்டுக்கிட்டு சாகலாம்
இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மூன்று பேரும் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பதும், மாற்று கட்சியை நோக்கி விரைவில் செல்லக்கூடும் என்பதும் தெளிவாகி வருகிறது. சமீபத்தில் தனியார் டிவிக்கு கருணாஸ் அளித்த பேட்டியில் பாஜகவுக்கு ஓட்டு கேட்பதற்கு நாண்டுக்கிட்டு சாகலாம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.