அதிமுக அரசுக்கே எனது முழு ஆதரவு.. 5 ஆண்டுக்கு அரசு தொடரணும் கருணாஸ் திடீர் பல்டி
சென்னை: அதிமுக அரசுக்கே எனது முழு ஆதரவு என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று எம்எல்ஏ கருணாஸுக்கும் அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது கருணாஸ் கூறுகையில் ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி தொடங்கப்படும் என கூறிய அரசுக்கு நன்றி.
ஜெ. ஆட்சி
அதிமுக அரசு 5 ஆண்டுகளும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே அதிமுகவுக்கு எனது முழு ஆதரவு தொடரும். இது ஜெயலலிதா அமைத்த ஆட்சியாகும் என்றார்.
கல்லூரி என் தொகுதியில்
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மணிகண்டன், கல்லூரி அமையவுள்ள இடம் கருணாஸ் தொகுதி அல்ல, எனது தொகுதி என்றார். உடனே கருணாஸ், எனது தொகுதிக்கு அரசு எதையும் செய்யவில்லை என ஒப்புக் கொண்ட அமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார் கருணாஸ்.
முதல்வருக்கு பயம்
கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிகள் படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய கருணாஸ், நான் அடித்து விடுவேனோ என முதல்வரே என்னை பார்த்து பயப்படுகிறார்.
சரணாகதி
இந்த கருணாஸ் இல்லாமல் கூவத்தூரில் அதிமுக ஆட்சி எப்படி அமைந்தது என கேள்வி எழுப்பினார். மேலும் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததும் பின்னர் முதல்வரை தனியே சந்தித்து சரணாகதி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.