கறுப்பா் கூட்டம் சேனல் முடக்கப்படுகிறது.. யூ-டியூப்க்கு போலீஸ் கடிதம்.. பாய்ந்த வழக்குகள்!
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களுடன் வீடியோ வெளியிட்ட கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூ-டியூப் நிறுவனத்துக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
Recommended Video
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துகளுடன் அண்மையில் வீடியோ வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதையடுத்து இந்த வீடியோவை தடை செய்யக்கோரியும், வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவு மாநில தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையா் மகேஷ் குமார் அகா்வாலிடம் கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஒரு புகார்அளித்தனா்.
அவர்கள அளித்த புகார் மனுவில் , 'கறுப்பா் கூட்டம்' என்ற பெயரில் செயல்படும் யூ-டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசியிருக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இதை ஏற்று வழக்கு கறுப்பா் கூட்டம் யூ-டியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னைக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் தேதி கைது செய்தனா். கந்த சஸ்டி குறித்து அவதூறாக வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் தேதி சரணடைந்தார்.
யூ டியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி...ராஜேந்திர பாலாஜி சந்தேகம்!!
இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் இயங்கி வந்த கறுப்பா் கூட்டம் அலுவலகத்துக்கு போலீஸார் கடந்த 17-ஆம் தேதி சீல் வைத்தனர். இதையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் யூ-டியூப் நிறுவனத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனா். இதனால் கறுப்பர் கூட்டம் சேனல் விரைவில் முடக்கப்படும் என கூறப்படுகிறது.