கரூர் விவசாயி மகள்...ஐஏஎஸ் கனவு...சாதித்த அபிநயா!!
சென்னை: கரூர் மாவட்ட விவசாயியின் மகள் அபிநயா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்து இருக்கிறார். பள்ளியில் இருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் படித்து வந்துள்ளார். அவரது கனவு இன்று நனவாகி இருக்கிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயி. இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் அபிநயா. அங்கிருக்கும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் கோவையில் இருக்கும் விவசாயக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து இவர் எழுதி இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு சென்றார். ராமநாதபுரத்தில் இருக்கும் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் அலுவலராக பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று படித்து வந்தார்.
தொடர்ந்து நான்கு முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வி அடைந்தார். ஆனாலும், நம்பிக்கை தளராமல் படித்தார். கடந்த 2019, ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட தேர்வும் எழுதினார். இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் நடத்தப்பட்ட நேர்முக தேர்விலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். நாட்டில் 50 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்காக உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் தேசிய அளவில் ஏழாம் இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவரது பெற்றோர் தற்போது நாகர்கோவிலில் உள்ளனர். அவரது தந்தை அங்கு மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற வெறியில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு படித்து வந்துள்ளார். தேசிய அளவில் ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
எடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது ஐந்து வயதில் கண் பார்வையை இழந்தார். ஆங்கில இலக்கியம் முடித்து இருக்கும் இவர் 2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு, வங்கித் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு ஆகியவை எழுதி வந்தார். இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்றார். அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் பணிக்கு சேர்ந்தார். பணியாற்றிக்கொண்டே 4வது முறையாக 2019ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். தேசிய அளவில் 286வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.