அதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை
சென்னை: கரூர் மக்களவை தொகுதியில் மக்களுக்கு பணியாற்ற அரசு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை என அந்த தொகுதியின் எம்.பி.ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் போட்டியிட்டு அதிமுகவின் சீனியர் தலைவரான தம்பிதுரையை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜோதிமணி. ஊராட்சி மன்றத் தலைவராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய ஜோதிமணி படிபடியாக உயர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
பிரச்சாரத்தின் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி கூட இவருக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
ஆப்செண்ட்
தேர்தல் முடிவு வெளியாகி ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்கு கடந்த நான்கு நாட்களாக கரூர் தொகுதியை வலம் வருகிறார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை தருவதோடு, உள்ளூர் பிரச்சனைகள் பற்றியும் முறையிடுகின்றனர். ஆனால் அது குறித்து விவரம் கேட்கலாம் என்றால் அதிகாரிகள் யாரும் ஜோதிமணியுடன் செல்வதில்லையாம்.
பயம்
கரூர் மக்களவை தொகுதியில் அரவக்குறிச்சியை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, வேடசந்தூர், விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுகம் வசம் உள்ளன. இதனால் ஜோதிமணி ஏற்பாடு செய்யும் குறைதீர்வு கூட்டங்களுக்கு அதிகாரிகள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரூர், அரவக்குறிச்சியில் ஜோதிமணியின் தொலைபேசி அழைப்புகள் கூட நிராகரிக்கப்படுகிறதாம்.
வேதனை
பாலவிடுதி,கடவூர், வையம்பட்டி, காவல்காரன்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் வாக்காளர்களுக்கு நன்றி கூற சென்ற ஜோதிமணி, இது தொடர்பாக மக்களிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் தனக்கு முட்டுக்கட்டைகள் இடப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மறைமுகமாக புகார் கூறினார்.
நம்பிக்கை
அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்பதற்காக தாம் முடங்கப்போவதில்லை எனக் கூறும் ஜோதிமணி, தனது பதவிக்குரிய அதிகாரத்தை வைத்து மக்களுக்கு உழைத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.