லொகேஷன் பார்க்க போன சுசீந்திரன்.. மீனவர்களிடம் சிக்கி மீண்ட டென்ஷன் கதை!
டைரக்டர் சுசீந்திரனை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: லொகேஷன் பார்க்க போன டைரக்டர் சுசீந்திரன் காசிமேடு மீனவர்களிடம் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை' படம் வெளியானது. இந்த படத்தில் மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களையும் மீனவர்களையும் தவறாக சித்தரித்து படம் வெளியானதாக கூறப்பட்டது.
இதனால் மீனவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்ததுடன், கோபமாகவும் உள்ளனர். இனிமேல் யார் வந்தாலும் சரி காசிமேடு பகுதிக்குள் ஒருத்தரையும் ஷூட்டிங்கிற்கு அனுமதிக்கவே கூடாது என்று மீனவர்களுக்குள் பேசி முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.
லொகேஷன் வந்த டைரக்டர்
இந்த நிலையில், இந்த விஷயம் தெரியாமல் டைரக்டர் சுசீந்திரன் படக்குழுவினர் காசிமேடு பக்கம் போனார்கள். சாம்பியன் என்ற படத்தை ஷூட் செய்வதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டனர். அந்த இடத்தில் எப்படியெல்லாம் ஷூட் செய்யலாம் என்ற முன்னேற்பாடுகளுடன் டைரக்டர் சுசீந்திரன் வந்திருந்தார்.
முற்றுகையிட்டனர்
காசிமேட்டுக்கு டைரக்டர் வந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மீனவர்கள் திரண்டு வந்தனர். டைரக்டர் மற்றும் படக்குழுவினரை திடீரென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத டைரக்டர் சுசீந்திரன், பிறகு சுதாரித்துகொண்டு மீனவர்களிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.
டைரக்டர் உத்தரவாதம்
பிறகு அவர்களிடம். "காசிமேடு துறைமுகத்தில் எடுக்கப்படும் சாம்பியன் படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். அதனால் இந்த படத்தில் மீனவர்களையும் வடசென்னை மக்களையும் பாதிக்காத வகையில்தான் கதை அமைந்திருக்கிறது" என்று அவர்களிடம் உத்தரவாதம் அளித்தார்.
பரபரப்பான காசிமேடு
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மீனவர்கள் அனைவரும் சமாதானம் ஆனார்கள். மேலும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்றதும்தான் அவர்களுக்கு நிம்மதியே வந்தது. இதையடுத்து, ஷூட்டிங் எடுக்க டைரக்டருக்கு அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அமைதியாக கலைந்து போனார்கள். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பரபரப்பாகி விட்டது!