அடிக்கடி கைது.. போலீஸ்காரரை சரமாரியாக கத்தியால் குத்திய காசிமேட்டு ரவுடி
போலீஸ்காரரை சரமாரியாக கத்தியால் தாக்கிய ரவுடிக்கு வலை
Recommended Video
ராயபுரம்: எப்ப பார்த்தாலும் தன்னையே கைது செய்த போலீஸ்காரரை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார் ரவுடி ஒருவர்!!
சென்னை ராயபுரம் ஸ்டேஷனில் போக்குவரத்து போலீசாக வேலை பார்ப்பவர் தேசிங்கு. வயது 41. இவர் காசிமேடு பகுதியில் டிராபிக்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் 2 பேர் வேகமாக வந்தனர். திடீரென வண்டியை தேசிங்கு பக்கத்தில் வந்து நிறுத்தினர். இதை பார்த்த தேசிங்குக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.
பைக்கில் தப்பினர்
உடனே இருவரும் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தேசிங்கின் முதுகில் சரமாரியாக வெட்டினார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தேசிங்கு, வலியால் அலறி துடித்தார். சத்தத்தை கேட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் பைக்கில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
விசாரணை ஆரம்பம்
ரத்த வெள்ளத்தில் சரிந்த போலீஸ்காரரை உடனடியாக பொதுமக்கள், மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசையே கத்தியை கொண்டு தாக்கியது யார் என காவல்துறை தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
ஃபேமஸ் ரவுடி
அப்போது, தேசிங்கை கத்தியால் வெட்டியது, காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி தீனா என்பது தெரியவந்தது. காசிமேட்டில் தீனா ரொம்ப ஃபேமஸ் ரவுடி. சில ஆண்டுகளுக்கு முன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தேசிங்கு வேலை பார்த்து வந்தார்.
முன்விரோதம்
அந்த நேரத்தில் ரவுடி தீனாவை நிறைய முறை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளார். இதனால் அப்போதிருந்தே தேசிங்கை பழிவாங்க தீனா காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைக்கவும், கூட தன் நண்பனை அழைத்து கொண்டு தீனா அவரை பழிவாங்குவதற்காக வெட்டியது தெரியவந்தது.
தீனா தலைமறைவு
இப்போது தீனாவை காணோம். தலைமறைவாக உள்ளார். அவருடன் வந்த கூட்டாளியும் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. எனவே இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.