சில வட இந்தியத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்... மார்க்கண்டேய கட்ஜு அதிரடி
Recommended Video
சென்னை: சில முட்டாள் வட இந்தியத் தலைவர்கள் செய்த காரியத்தால்தான் இன்று தமிழர்கள் இந்தி பேச முடியாமல் திணறுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் மறைந்த ஜெயலலிதாவை சந்தித்த விவரத்தை நான் கூற விரும்புகிறேன். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக அரசின் தலைமை செயலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் அலுவலகத்தில் வைத்து அவரைப் பார்த்தேன். அப்போது நான் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்தேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.
[14 வருஷத்துக்கு முன்னாடியே எச்சரித்தும்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.. குமுறும் திருச்சி மக்கள்!]
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதி தருமாறும், அதற்குரிய ஊதியத்தை அரசே வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைப்பதற்காக நான் போயிருந்தேன். நான் நேரம் கேட்டதுமே அவர் உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுத்து வரச் சொன்னார். அவரது அறையில் அரசியல்வாதிகள் யாரும் இல்லை. 7 அல்லது 8 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் இருந்தனர். அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்த விவகாரத்தை பேசி முடித்த பின்னர் (அலவன்ஸ் வழங்க அவர் ஒப்புக் கொண்டார்) நான் அவரிடம் பொதுவாக பேசினேன். தமிழர்கள் மீது நான் அளவற்ற அன்பும், மதிப்பும் வைத்திருப்பதை அவரிடம் விளக்கினேன். தமிழர்கள் இந்தி கற்க வேண்டியதன் அவசியத்தையும் அவரிடம் தெரிவித்தேன். வட இந்தியாவுக்கு வரும் தமிழர்கள் இந்தியில் பேசி சிரமப்படுவதையும் அவரிடம் தெரிவித்தேன். வட இந்தியர்களுக்கு இந்திதான் தெரியும். குறிப்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், கடைக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே அதுபோன்ற சமயங்களில் தமிழர்கள் பெரும் சிரமப்பட நேரிடுகிறது.
நான் பேசுவைத அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா நான் எதிர்பாராத வகையில் இந்தியில் பேசத் தொடங்கினார். சாதாரணமாக அல்ல, ஒரு வட இந்தியர் எப்படிப் பேசுவாரோ, அந்த அளவுக்கு மிகத் தெளிவான இந்தியில், நல்ல புலமையுடன் பேசினார். அவர் பேசப் பேச நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவரிடமிருந்து, ஒரு தமிழரிடமிருந்து இந்த அளவுக்கு தெளிவான இந்தியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் சொன்ன அனைத்தையும் நான் ஆமோதித்தேன்.
உண்மையில் சில வட இந்திய அரசியல் தலைவர்கள்தான் இந்தியை திணிக்க முயன்றனர். அந்த முட்டாள்தனத்தால்தான், இன்று தமிழர்கள் இந்தியில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இன்று தமிழர்கள் இந்தியிலும் கோலோச்சியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் கட்ஜு.