அடங்காத கீழ்பென்னாத்தூர் பள்ளி மாணவர்கள்.. நடு ரோட்டில் மீண்டும் அடிதடி.. பீதியில் பெற்றோர்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர். இந்த வீடியோவும் வெளியாகி பார்ப்போரை அச்சமூட்டுவதாக உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இப்படி ரவுடிகளை போல நடு சாலையில் மோதிக்கொள்வதை பார்க்கும்போது மாநிலம் எதை நோக்கிச் செல்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம். கீழ்பென்னாத்தூரிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்களிடையே, யார் பெரியவர் என்று நடந்த மோதல் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இரு கோஷ்டிகள் மோதல்
அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து அவ்வப்போது மோதி வருகிறார்கள். சமீபத்தில் அப்படித்தான் ஒரு மாணவரை எதிர் கோஷ்டியினர் முட்டி போட வைத்து அடித்து உதைத்த காட்சி வீடியோவாக வெளியாகி பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, தலைமையாசிரியர் சார்பில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் கவுன்சலிங்
போலீசாரும் சிறுவர்களாக இருக்கிறார்களே என்று, கவுன்சலிங் கொடுத்தனர். அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மறுபடியும் அதே ஊரில் மாணவர்கள் மோதல் ஏற்பட்டுள்ளது.
அடிதடி
இந்த முறை மோதல் பெரிய அளவில் கும்பலாக நடந்துள்ளது. நடுச் சாலையில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறது. அனைவருமே யூனிபார்ம் அணிந்த மாணவர்கள். இதை பார்க்கும் பெற்றோர் மனது துடித்து போகும் என்பது நிச்சயம். ஆபாச கெட்ட வார்த்தைகளை பேசியபடி அடித்துக் கொள்கிறார்கள். பழைய மோதலுக்கு பிந்தைய மோதலா இது என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
முடியாத மோதல்
இந்த வீடியோவை பார்த்தால், இந்த மோதல் ஒரே நாளில் முடிவடையும்போல தெரியவில்லை. மாணவர்களுக்கு வெறும் கல்வி கற்பித்தல் போதாது. அடிப்படை மனிதம், அடிப்படை ஒழுக்கம் போன்றவை கற்பித்து தர வேண்டிய தேவையுள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் இப்போது பள்ளி மாணவர்கள் வரை வந்துள்ளது அனைத்து தரப்பையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.