வில்சன் கொலை: தீவிரவாதிகள் தங்க வீடு தந்தவரை தூக்கியது போலீஸ்.. வதந்தி பரப்பிய காங்.பிரமுகரும் கைது!
வில்சன் குறித்து தவறான தகவல் பரப்பிய காங்.பிரமுகர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: சிறப்பு எஸ்ஐ வில்சன் குறித்து தவறாகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்ட ஷாகுல் நவாஸ் என்ற காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அதேபோல முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த உசைன் ஷெரீப் என்பவரையும் தமிழக கியூ போலீசார் கைது செய்துள்ளனர்.
களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள்.
26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை மற்றும் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன்தான் வில்சன் கொலை நடந்துள்ளது.
மெகபூப் பாஷா
இது தொடர்பாக தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். உபா சட்டப்பிரிவில் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.. ஜெயிலில் உள்ள அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவாகி உள்ளது.. அவர்கள் 2 பேரும் தந்த தகவல்களின் பேரில் வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் மெகபூப் பாஷா, ஜெபியுல்லா, மன்சூர்கான், அஜ்மத்துல்லா ஆகிய 4 பேரையும் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத அமைப்பு
இதில், சுத்தகொண்டபாளையாவை சேர்ந்த அல் உம்மா தீவிரவாதி மெகபூப்பாஷா, பாகிஸ்தானை சேர்ந்த ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன்மூலம்தான் தென்னிந்தியாவில் அல்-உம்மா தீவிரவாத அமைப்பை பலப்படுத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
துப்பாக்கி
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு ரகசியமாக டிரெயின்ங் தருவது, தங்களது அமைப்புக்கு எதிரானவர்களை தாக்குவது.. என்பன போன்ற பல வேலைகளைதான் இந்த மெகபூப் பாஷா செய்து வந்துள்ளார். இதேபோலதான் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய இஜாஸ் பாஷாவுக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நவாஸ் ஷாகுல்
இந்நிலையில் வில்சன் குறித்து தவறாகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவிட்டதாக நவாஸ் ஷாகுல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. தேங்காய்பட்டணம் பகுதியை சேர்ந்த நவாஸ் ஷாகுலை, புதுக்கடை போலீசார் கைது செய்துள்ளனர். நவாஸ் ஷாகுலுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு இருக்கிறதா? சமீம், தவ்பீக் போன்றோருடனும் தொடர்பு உள்ளதா? என்ற விசாரணையில்இறங்கி உள்ளனர்.
உசைன் ஷெரீப்
கைது செய்யப்பட்ட நவாஸ் ஷாகுல், திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் உசைன் ஷெரீப் என்பவரையும் தமிழக கியூ போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்தான் சமீம், தவ்பீக் குற்றவாளிகளுக்கு பெங்களுரில் தங்க அடைக்கலம் தந்தவராம்! சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் உசைன் ஷெரீப்பை புழல் சிறையில் அடைத்தனர். ஒவ்வொரு நாளும் வில்சன் கொலையில் புது புது தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளது பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.