முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரிப்பதா.. பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜவாஹிருல்லா ஆவேசம்
கேரளா யானை கொல்லப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "மலப்புரம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்று யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜவாஹிருல்லா காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. இதற்கு முந்தைய காலகட்டத்தில், காட்டு விலங்குகள் மீது எத்தனையோ தாக்குதல்கள் நடந்திருந்தாலும், இப்போது நடந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.. இந்த அதிர்ச்சி இன்னும் விலகவும் இல்லை.
பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தபடியே உள்ள நிலையில், யானை மரணத்தை வைத்தும் மதரீதியான கருத்துக்களும் எழுந்து வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, "கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்கு வேட்டையாடுதல் நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை, 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளதில் என்ன நடவடிக்கை எடுத்தது கேரள அரசு" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேனகா காந்தி உட்பட பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துக்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் அறிக்கை ஒன்றினை காட்டமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
"கேரள மாநில வனப்பகுதியில் பழத்தில் வெடி வைத்து ஒரு கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் யானை மரணத்தை வைத்து மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்தோடு பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவது கண்டனத்திற்குரியது.
யானையின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டம் இந்தியாவிலேயே அதிக வன்முறைகள் நடக்கும் மாவட்டம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு யானை அப்பகுதி மக்களால் கொல்லப்படுகிறது என்றும், மலப்புரம் சாலைகளில் விஷத்தை வைத்து 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறது என தனது விஷமக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
விலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி?.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி வாக்குமூலம்!
கேரளா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமானோர் வாழும் மாவட்டமான மலப்புரம் மாவட்டத்தை தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள மேனகா காந்தியின் இதுபோன்ற மதவெறுப்புணர்வு கருத்து வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இறந்த யானை காயத்துடன் ஆற்றிலிருந்த இடம் மலப்புரம் மற்றும் பாலக்காடு எல்லை. யானை இருந்த இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாவட்ட மக்களை ஈவிரக்கமற்ற மனிதர்களாகச் சித்தரித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
யானை மரணம் குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் எந்த ஆதாரமுமின்றி மலப்புரம் முஸ்லிம் மக்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலப்புரம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.