தினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்
சென்னை: பருவமழை பொய்த்ததன் காரணமாகவே தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,
தமிழகத்தின் பல பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், மாநிலத்தில் பல்வேறு முக்கிய நீராதாரங்கள் வறண்டு போயுள்ள நிலையிலும், மக்களுக்கு குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையை பொருத்த வரை துரிதமாக செயல்பட்டு தண்ணீரை விநியோகித்து வருகிறோம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளுமே வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை நகர மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம்.
ராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள்
முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம்.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தலைநகர் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு, 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்
குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சராசரி மழையளவு பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். கிருஷ்ணா நதியிலிருந்து ஆந்திரா 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்தது. அதே போல தண்ணீர் தரும் கேரள அரசின் முடிவை வரவேற்பதாகவும், தினந்தோறும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் நல்ல பயன் தரும் என்றும் கூறினார்.
ஏனெனில் கேரள அரசு வழங்க முன்வந்த 20 லட்சம் நீர் போதாது. எனவே தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் வழங்க கோரி கடிதம் எழுத திட்டமிட்டுள்ளோம் என்றார் முதல்வர்.